ஆட்சிக்கு வந்தால் ஊழல் சொத்துகளை பறிமுதல் செய்வோம்- அணு உலைகளை அகற்றுவோம்: வைகோ
மாமண்டூர்: மக்கள் நலக் கூட்டணி- தேமுதிக- தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் லோக் ஆயுக்தா சட்டத்தைக் கொண்டு வருவோம்; ஊழல் சொத்துகளை பறிமுதல் செய்வோம் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ உறுதியளித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூரில் நடைபெற்ற மக்கள் நலக்கூட்டணி- தேமுதிக மாநாட்டில் வைகோ பேசியதாவது:
தமிழகத்தில் ஊழல் மலிந்து போய்விட்டது. தமிழக விளைநிலங்கள் தரிசுநிலங்களாகிவிட்டன. ஸ்பெக்ட்ரம் ஊழல் பணப்பரிவர்த்தனையில் ஸ்டாலின் பயனடைந்தார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் பலிகடாவாக்கப்பட்டார் கனிமொழி. நாங்கள் ஆட்சிக்கு வருவோம்.. லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டு வருவோம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக் கடன்களை அரசே ஏற்கும். நாங்கள் ஆட்சிக்கு வரும்போது தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்படும். மதுவிலக்கு என ஜெ.வும் கருணாநிதியும் சொல்வது ஊரை ஏமாற்றத்தான்....
பீகாரில் நிதிஷ்குமார் செய்ததைப் போல நாங்கள் மதுவிலககி அமல்படுத்துவோம். மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தின் போது கலிங்கப்பட்டியில் என் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. அச்சம்பவம் என்னை சுட்டுக் கொல்ல சதியோ என்ற சந்தேகம் உள்ளது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வலியுறுத்துவோம். கர்நாடகாவை மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் கூடங்குளம் அணு உலைகள் அகற்றப்படும். மீத்தேன், பாறை எரிவாயு திட்டங்கள் அடித்து விரட்டப்படும். இலங்கை அகதிகளுக்கு தமிழகத்தில் வாழ்வு இல்லாத நிலை இருக்கிறது. இதனை மாற்றியமைப்போம்.
இவ்வாறு வைகோ கூறினார்.












Click it and Unblock the Notifications