புதிய ரூபாய் நோட்டு மூலம் அயோக்கியத்தனமாக இந்தியை திணிப்பதா? வைகோ கண்டனம்
புதிய ரூபாய் நோட்டில் இந்தி திணிக்கப்பட்டுள்ளதாக வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: புதிய ரூபாய் நோட்டு மூலம் மத்திய அரசு இந்திய திணிப்பதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

500, 1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தவுடன் முழுமையாக வரவேற்றவன் நான். மிக சதுர்யமாக கருப்பு பணத்தையும், ஊழலையும் ஒழிக்க எடுக்கப்பட்ட சாகசமான முயற்சியை பாராட்டுகிறேன் என கூறியிருந்தேன். இந்த திடீர் முடிவினால் சாதாரண மக்கள், நடுத்தர மக்கள், திருமணத்துக்காக சிறுக, சிறுக சேமித்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர்.
பல இடங்களில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் நடவடிக்கை முறையாக செயல்படவில்லை. ரூ.500 நோட்டு இன்னும் வரவில்லை. ரூ.2000 நோட்டுகள் தான் தருகின்றனர். இவற்றை முன்பே தயார் நிலையில் வைத்து எல்லா ஏற்பாடுகளையும் செய்து இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும். பொதுமக்களுக்கு ஏற்பட்டு உள்ள சிரமத்தை உணர்ந்து கவலைப்படுகிறேன்.
வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டு உள்ள லட்சக்கணக்கான கோடிகள் பணத்தை கொண்டு வந்து நபருக்கு ரூ.15 லட்சம் தருவேன் என மோடி சொன்னது நடக்கவில்லை. இருந்தாலும் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்க நடவடிக்கை தான். ஆட்சி அதிகாரங்களை பயன்படுத்தி கள்ளத்தனமாக பணத்தை சேர்த்து வைத்தவர்களுக்கு வயிற்றில் புளியை கரைத்து இருக்கும். யாரும் நிம்மதியாக தூங்கி இருக்க முடியாது.
சந்தடி சாக்கில் அயோக்கியத்தனமாக இந்தியை திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு இருப்பது சகிக்க முடியாதது. நல்ல நோக்கத்திற்காக செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டு இந்தியை திணிப்பதை கண்டிக்கிறேன். பன்முகத்தன்மையை சிதைக்கிற நோக்கில் ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஈடுபடுவது கண்டனத்துக்குரியது.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications