பற்றி எரியும் பரபரப்புக்கு மத்தியில்.. மதுரை ஏர்போர்ட்டில் வைகோவை சந்தித்த தமிழிசை...!
மதுரை: மதுரை விமான நிலையத்தில் மதிமுக நிறுவனர் வைகோவும், தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதிமுகவும் அங்கம் வகிக்கிறது. ஆனபோதும், தொடர்ந்து பல்வேறு விஷயங்களில் பிரதமர் மோடி குறித்து வைகோ கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த வாரம் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, ‘பிரதமரை ஒருமையில் பேசுவதை வைகோ நிறுத்த வேண்டும். இல்லையென்றால் அவர் தமிழகத்தில் எங்குமே பாதுகாப்பாக இருக்க முடியாது' என மிரட்டல் தொனியில் பேசியிருந்தார்.
எச்.ராஜாவின் இந்த பேச்சுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், மதுரையில் நேற்று 5 மாவட்ட பாஜகவின் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் மதுரை வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை, ‘வைகோ, ராமதாஸ் போன்றோர் எந்த பிரச்சனையானாலும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கலாமே தவிர எதிர்க்கட்சிபோல் தனிபட்ட முறையில் விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும். கூட்டணி தர்மத்தை அவர்கள் காக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே, வைகோவுக்கு கண்டனம் தெரிவித்திருந்ததை தொடர்ந்து, எச்.ராஜாவின் வீட்டு முன்பு நேற்று போராட்டம் நடத்திய ம.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். .
இத்தொடர் சம்பவங்களால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பாஜக கூட்டணியிலிருந்து வைகோ வெளியேறப் போகிறார் என்ற யூகங்களும் உலா வந்தன. அவர் வெளியேற வேண்டும் என்று தமிழருவி மணியன் போன்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்
இந்நிலையில், நேற்று இரவு தமிழிசை சவுந்திரராஜன் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் சென்றார். அங்கு காத்திருப்போர் அறையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இருந்தார். இதைப் பார்த்த தமிழிசை, அவரது அருகே சென்று வணக்கம் தெரிவித்து சிறிது நேரம் பேசினார். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை.
இருவரும் சுமார் 20 நிமிடம் வரை பேசிக்கொண்டு இருந்ததாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து இருவரும் ஒரே விமானத்தில் சென்னை கிளம்பி சென்றனர்.