For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிபிசி தமிழ் சேவையை லண்டனில் இருந்து டெல்லிக்கு மாற்ற திட்டம்: வைகோ, வீரமணி எதிர்ப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: பி.பி.சி. தமிழ் சேவையை இந்தியுடன் இணைக்க ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Vaiko and Veeramani fears moving BBC Tamil to Delhi will leads to its eventual closure

இதுகுறித்து கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:

1920களில் இங்கிலாந்து, தன்னுடைய காலனி நாடுகளுக்கான ஒரு பொது வானொலிச் சேவை உருவாக்கியது. இங்கிலாந்தை சேர்ந்த ஜான் ரெத் என்பவரின் சிந்தனையில் துவங்கிய இந்த வானொலிக்கு ஆரம்பத்தில் ஜான் ரெத் தலைவராக இருந்து வந்தார். 1927 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக இது மூடப்படவேண்டிய நிலையில் இருந்தபோது பிபிசி உலகப் பொது அமைப்பின் (தற்போதைய ஐ.நா. போன்ற அமைப்புடன்) பொது நிதியில் இயங்க ஆரம்பித்தது. (அதுவரை பிரிட்டன் நாடாளுமன்ற கட்டுப்பாட்டில் இருந்து வந்தது) பி.பி.சி. என்ற பெயர் பிரபலமாகிவிட்டதால் எவ்வித மாற்றமும் இன்றி தொடர்ந்து அழைக்கப்பட்டது.

பி.பி.சி. என்பது பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டு நிறுவனம் என்னும் பொருள்படும் British Broadcasting Corporation என்னும் ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகும். பி.பி.சி. தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையத்தள சேவைகளை வழங்குகிறது. இதன் தலைமையகம் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரத்தில் உள்ளது. இந்நிறுவனம் இருபத்து மூன்றாயிரம் பணியாளர்களைக் கொண்டுள்ள உலகின் பெரிய ஒலிபரப்பு நிறுவனமாகும்.

இது உலகின் 150 தலைநகரங்களில் ஒலிபரப்புகிறது. உலகின் 28 மொழிகளில் நிகழ்ச்சிகளை ஒலிரப்புகிறது. தமிழோசை நிகழ்ச்சிகளை பிப்ரவரி 2002ல் இருந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டு நிறுவனம் நேரடி ஒலிபரப்பு செய்து வந்தது. எனினும் ஈழப்போர்ச் செய்திகளைப் பி.பி.சி. ஒலிபரப்பிய வேளைகளில் அதனைக் குழப்பியதால் பி.பி.சி. 9 பிப்ரவரி 2009 முதல் இலங்கை ஒலிபரப்பு நிலையத்தினுடான ஒலிபரப்பை இடைநிறுத்திக் கொண்டது.

இந்நிலையில், தமிழ்ச் சேவை ஒலிபரப்பினை பி.பி.சி. ஹிந்தி சேவையுடன் இணைந்த நிலையில் டெல்லியில் இயங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது. செலவுகளைக் குறைக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பி.பி.சி. அறிவித்துள்ளது. பி.பி.சி. பேச்சாளர் ஒருவர் இது தொடர்பில் தகவல் தருகையில், பெருகிவரும் நேயர்களுக்கு ஏற்ப பி.பி.சி. தமிழ்ச் சேவை புதுடெல்லிக்கு மாற்றப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். பி.பி.சி. தமிழ்ச் சேவை இந்தியாவில் உள்ள தமிழ் நேயர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில், புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் இலங்கை நேயர்களைக் கருத்திற் கொண்டு இந்த மாற்றம் இடம் பெறுவதாகவும் பி.பி.சி.யின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பி.பி.சி. தமிழோசை என்பது பி.பி.சி. உலக சேவை வானொலியின் தமிழ் சேவையாகும். இவ்வானொலி சேவையானது 1941 மே 3 ஆம் நாள் முதல் இயங்கி வருகின்றது. இவ்வானொலி ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் தமிழ் மொழியில் உலகச் செய்திகளையும் வேறு பல நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகின்றது. இங்கு இந்திய, இலங்கைச் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதோடு, செய்தியரங்கம் பகுதியில் அவை விரிவாக ஆராயப்படுகிறது. தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் இச்சேவை வானலைகளில் ஒலிபரப்பப்படுவதோடு ஏனையபிரதேசங்களில் இணைய தளத்தில் பரப்பப்படுகின்றன.

பி.பி.சி. தமிழ் நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டு நிறுவனம் தனது தேசியச் சேவையில் மறு ஒலிபரப்பு செய்கிறது. பி.பி.சி.யின் தமிழோசை நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 70 லட்சம் நேயர்கள் உள்ளனர். முக்கியமாக பி.பி.சி. தமிழோசை நிகழ்ச்சி உலகம் முழுவதிலுமுள்ள புலம் பெயர் தமிழர்களுக்குப் பொதுவான ஓர் தகவல் தளமாக இருந்து வருகிறது.

டெல்லிக்கு மாற்றப்படும்போது பெருவாரியான இலங்கைத் தமிழர்களின் செய்தியைக் கொண்டு செல்வதில் நிச்சயம் பாதிப்பு ஏற்படும். இந்திய-இலங்கை நட்புறவின் காரணமாக இலங்கை அரசுக்கு ஆதரவான செய்திகளே அதிகம் ஒலிபரப்பப்படும், அதே வேளையில் இந்தியத் தமிழர்களுக்கான பயனுள்ள எந்த நிகழ்ச்சிகளும் அதில் இடம்பெறாத சூழல் ஏற்படும்.

பி.பி.சி. போன்ற பொது ஒலிபரப்பு கூட்டு நிறுவனங்கள் தலைமையைவிட்டு தூரச் செல்லும்போது அங்கு அரசியல் நுழையும் வாய்ப்புள்ளது. மேலும், பி.பி.சி. தமிழோசை டெல்லிக்கு மாற்றப்படும்போது ஒரே நிர்வாகத்தின்கீழ் இது வருவதால் பி.பி.சி. தமிழோசைக்கு என்று முக்கியத்துவம் தரப்படுவது நிறுத்தப்படும் அபாயம் உண்டு.

முக்கியமாக சில தமிழ் விரோத சக்திகள் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படும்போது எதிர்காலத்தில் பி.பி.சி. தமிழோசை முற்றிலும் நிறுத்தப்படும் அபாயம் ஏற்படும். எடுத்துக்காட்டாக இலங்கை வானொலியின் சுதந்திரமான அமைப்பில் அரசியல் நுழைந்த பிறகு தமிழ் ஒலிபரப்பு முற்றிலுமாக மக்களின் ஆதரவை இழந்து, இன்று பெயருக்கு இயங்கி வருவதுபோல் பி.பி.சி. தமிழோசையின் எதிர்காலமும் அமைந்துவிடும். இதனால், உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்களுக்குப் பொதுவான ஒரு தகவல் இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.இவ்வாறு வீரமணி கூறியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ''உலகம் எல்லாம் வாழும் தமிழர்களுக்கு ஈழத் தமிழர் குறித்த செய்திகளையும், தமிழ் இனம் பற்றிய செய்திகளையும் லண்டனில் இருந்து இயங்கிய பி.பி.சி. தமிழோசை ஒலிபரப்பின் மூலம் தெரிவித்து வந்தது. குறிப்பாக 2009 முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின்னர் தமிழ் ஈழ மக்கள் படும் அவலத்தையும் கொடுந்துயரத்தையும் ஓரளவாவது பி.பி.சி. தமிழோசை அறிவித்து வந்தது.

இந்தச் சூழ்நிலையில், பி.பி.சி. தமிழோசையை இந்தி மொழியுடன் இணைத்து லண்டன் தலைமையகத்திலிருந்து மாற்றி புதுடெல்லியில் இருந்து ஒலிபரப்ப முடிவு செய்திருப்பதாக வந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி தருகிறது. இதுகுறித்து, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விளக்கமாகவும், விரிவாகவும் அறிக்கை தந்துள்ளார். அந்த அறிக்கையை அப்படியே வழிமொழிந்து நானும் பதிவு செய்கிறேன் என்று கூறி, வீரமணியின் அறிக்கையை அப்படியே வைகோவும் தந்துள்ளார்.

English summary
Vaiko and Veeramani fears moving BBC Tamil to Delhi is a precursor to its eventual closure in a few years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X