3 அடுக்கு விவசாயக் கூட்டுறவு கடன்முறையின் அடித்தளத்தைத் தகர்க்கும் முயற்சியை முறியடிப்போம் - வைகோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: மூன்றடுக்கு விவசாயக் கூட்டுறவு கடன்முறையின் அடித்தளத்தைத் தகர்க்கும் முயற்சியை முறியடிப்போம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை

இந்தியா எங்கும் கிராமங்கள்தோறும் விவசாயிகளுக்குக் கடன் கொடுப்பதோடு அவர்களின் பொருளாதார முயற்சிகளுக்கு உதவ, அரசுக்குள் ஓர் அரசாக (State within a State) ஜனநாயக முறையில் உருவாக்கப்பட்டு ஒரு நூற்றாண்டுக்கு மேலாகச் செயல்பட்டு வருபவை கிராமக் கூட்டுறவு விவசாயக் கடன் சங்கங்கள் ஆகும்.

Vaiko warns centre on farm loans

மாவட்ட அளவில் இவற்றுக்குக் கடன் வழங்கி வழிகாட்டக் கூடியவை மாவட்டக் கூட்டுறவு மத்திய வங்கிகள் ஆகும். மாநில அளவில் இவற்றுக்குக் கடன் வழங்கி பாதுகாப்பவை மாநிலக் கூட்டுறவு வங்கிகள் ஆகும். இதை மூன்றடுக்கு விவசாயக் கூட்டுறவுக் கடன்முறை என்பர்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் 1904-ஆம் ஆண்டிலேயே இந்த அமைப்பு முறை உருவாக்கப்பட்டது. இதற்காக வெள்ளையர்கள் பிரிட்டீஷ் கவுன்சிலில் இந்தியக் கூட்டுறவுக் கடன் சட்டத்தை நிறைவேற்றினர். முன்னர் இவை இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து நேரடியாகக் கடன் பெற்று அதன் கட்டுப்பாட்டில் இயங்கி வந்தன.

1982-இல் ரிசர்வ் வங்கியினுடைய பணிச் சுமையைக் குறைத்து விவசாயக் கடன்களைச் சிறப்பாகக் கையாள உருவாக்கப்பட்டதே தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் வேளாண் வங்கி (NABARD) ஆகும். ரிசர்வ் வங்கியிடமிருந்து நேரடியாகக் கடன் பெற்று வேளாண் கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கி அவற்றைக் கட்டுப்படுத்தி வழிகாட்டும் பணியை ‘நபார்டு' வங்கி செய்யும் என்று கருதப்பட்டது. ஆனால், நபார்டு வங்கியின் அண்மைக்காலச் செயல்பாடுகள் கூட்டுறவு அமைப்புகளுக்கு வழிகாட்டுவதாக இல்லாமல் அவற்றைக் கெடுபிடியான நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கிக் கூட்டுறவை நலிவுறவும் சிதைவுறவும் வழிவகுக்கும் தன்மையில் உள்ளன.

எடுத்துக்காட்டாக 2002-இல் சிவகங்கை மாவட்டக் கூட்டுறவு மத்திய வங்கியை வங்கியியல் சட்டம் BR Act 11 (1)-இன்கீழ் நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அதிலிருந்து கோடிக்கனக்கான வைப்புத் தொகையை ரூ. 1,000/-க்கு மேல் எவரும் திரும்பப் பெற முடியாது என முடக்கியது. இவ்வாறு முடக்கியதால் தங்கள் வாழ்நாள் ஊதியமான ஓய்ñதியக் கொடை, வருங்கால வைப்புத் தொகை ஆகியவற்றைத் தங்கள் மக்களின் திருமணத்துக்காகவோ அல்லது வீடு வாசல் வாங்குவதற்காகவோ உரிய நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம் எனப் பாதுகாப்பு கருதி இட்டு வைத்த முதியவர்கள் மூன்றாண்டு காலம் அடைந்த அல்லல்கள் சொல்லில் அடங்காதவை. ரூ. 30 கோடியை இந்த மத்திய வங்கியில் இட்டு வைத்திருந்த இளையான்குடி கூட்டுறவு நகர வங்கியும் இதனால் அடைந்த நலிவு கொஞ்சநஞ்சமல்ல.

அன்றைய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தன் சொந்தத் தொகுதியில் இருந்த இந்தக் கூட்டுறவு மத்திய வங்கியை நபார்டு வங்கியின் 11 (1)-இன்கீழ் நடவடிக்கையில் இருந்து மீட்க ஒரு துரும்பைக்கூட அசைத்துப் போடவில்லை. சிவகங்கை மாவட்ட மக்கள், கூட்டுறவு வங்கி மீது அவநம்பிக்கை கொள்ளும் நிலையை ஏற்படுத்திய நபார்டு வங்கி அதிகாரிகள் இந்த நடவடிக்கை எடுத்ததன்நோக்கம் ‘வைப்புக்காரர்களின் நலனைக் காப்பதற்காகவே' என்று கூறி கூசாமல் காமெடி செய்தனர்.

இறுதியில் அன்றைய தமிழக அரசு எடுத்துக் கொண்ட பெரு முயற்சியாலும், ரிசர்வ் வங்கியின் தலையீட்டாலும் சிவகங்கை மட்டுமல்லாது ஏனைய மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும் காப்பாற்றப்பட்டன. மேலும், இனிமேல் மாநில அரசுகளின் சம்மதமின்றி நபார்டு வங்கி இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடாது என்று ரிசர்வ் வங்கி தடைவிதித்து இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இப்போது வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக நபார்டு வங்கி மூன்றடுக்குக் கூட்டுறவுக் கடன் முறையின் அடித்தளத்தைத் தகர்க்கும் வகையில் கிராமக் கூட்டுறவுக் கடன் சங்கங்களை வங்கியியல் பணியில் ஈடுபடக் கூடாது எனத் தடுத்து, அவற்றை மத்திய வங்கியின் முகவர்களாக மட்டுமே செயல்பட வேண்டும் என்று முடக்கி, அவற்றின் சொத்துகளையும், பொறுப்புகளையும் மத்திய வங்கிக்கு மாற்றம் செய்து கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வருகின்றது.

இதற்காக துணை விதிகளைத் திருத்தவும் வலியுறுத்தி வருகிறது. நுனிக் கொம்பிலிருந்து அடிக்கிளையை வெட்டும் இந்த முயற்சிக்கு உடன்பட முடியாது என்று கேரள அரசு நிராகரித்து விட்டது; கேரள உயர் நீதிமன்றமும் தடை விதித்துள்ளது.

மேலும், கிராம விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு அடிப்படையான கிராமக் கூட்டுறவுக் கடன் சங்கங்களை விவசாயிகளிடமிருந்து அழிக்கும் இந்த முயற்சி மாநில சுயாட்சிக் கொள்கைக்கு முற்றிலும் எதிரானதாகும்.

1904-இல் தொடங்கி சுதந்திரமாக ஜனநாயக முறையில் இன்றுவரை இயங்கி வரும் தொடக்கக் கூட்டுறவு வேளாண்மைக் கடன் சங்கங்கள் என்னும் கூட்டுறவு அமைப்பின் ஆணிவேரையும் அறுத்தெரியும் முயற்சியில் நபார்டு வங்கி ஈடுபட்டுள்ளதை மிக வன்மையாகக் கண்டிக்கிறேன். மத்திய, மாநில அரசுகள் இதில் உடனடியாகத் தலையிட்டு நபார்டு வங்கியின் இந்தத் தன்முனைப்பான - இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு முரணான - ஒட்டுமொத்தக் கூட்டுறவு அமைப்புகளின் அடித்தளமான தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளை அழிக்கும் முயற்சியைத் தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நபார்டு வங்கி தனது நோக்கத்திற்கும், அதிகார வரம்புக்கும் அத்துமீறலாக மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு எதிராக இந்திய மாநிலக் கூட்டுறவு வங்கிகளின் கூட்டமைப்பும், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கமும், கூட்டுறவாளர்களும் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கும், போராட்டத்துக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தன் முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும், கூட்டுறவுக் கடன் வங்கிகளைக் காப்பாற்றவும், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும் மக்களைத் திரட்டிப் போராட நேரிடும் என்று எச்சரிக்கிறேன்.

உண்மைக்குப் புறம்பான ஒன்றுக்கொன்று முரண்பாடான புள்ளி விவரங்களைக் காட்டி நபார்டு வங்கி மேற்கொள்ளும் இந்த முயற்சி,

‘நல்லது செய்தல் ஆற்றிராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்'

என்ற அறவுரையைத்தான் நினைவுபடுத்துகின்றது. உள்ளதைச் சிதைக்கும் இந்த உருப்படாத முயற்சியை உடன் கைவிட தமிழ்நாட்டின் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இல்லாவிடில், இவ்வளவு காலமாகக் கட்டிவளர்த்த கூட்டுறவு விவசாயக் கடன் அமைப்புகள் அழிக்கப்படுவதற்கு இந்த ஆட்சியும் உடந்தையாக இருந்தது என்று வருங்காலம் பழிக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+