இந்தியா முழுவதும் மோடி அலை.... விருதுநகரில் வைகோ அலை - வைகோ மகன் துரை வையாபுரி
சிவகாசி: இந்தியா முழுவதும் மோடி அலை வீசுகிறது. விருதுநகர் தொகுதியில் மோடி அலை, வைகோ அலை என்று இரண்டு அலைகள் இருக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மகன் துரை வையாபுரி கூறியுள்ளார்.
சிவகாசியில் இருசக்கர வாகனப் பிரச்சாரத்தை தொடங்கி வைத்து, வைகோ அவர்களின் மகன் துரை வையாபுரி செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் கூறியதாவது:
விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சிவகாசி மற்றும் சாத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் இருசக்கர வாகனப் பிரச்சாரம் செய்வதற்காக முன்னூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கூடியிருக்கிறார்கள்.
வைகோவுக்காக வாக்கு கேட்டு
வைகோவுக்கு வாக்குகள் கேட்டு நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அவர்கள் பயணம் மேற்கொள்கிறார்கள். இதில், கழகத் தோழர்களும், கூட்டணிக் கட்சித் தோழர்களும், எந்தக் கட்சியைச் சாராத இளைஞர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இரண்டு காரணங்களுக்காக வந்திருக்கிறார்கள்.
மோடி பிரதமர்
ஒன்று பிரதமராக மோடி வரவேண்டும், இரண்டாவது விருதுநகர் தொகுதியில் வைகோ வெற்றி பெற வேண்டும் என்பதுதான்.
பட்டாசுத் தொழிலுக்குப் பாதுகாப்பு
வைகோ வெற்றி பெற்றால், இங்கு இருக்கக்கூடிய பட்டாசு, தீப்பெட்டி மற்றும் அச்சக தொழில்களுக்கு நல்ல பாதுகாவலராக இருப்பார் என்ற நம்பிக்கையில் இவர்கள் வந்திருக்கிறார்கள்.
வைகோ அலை
இந்தியா முழுவதும் மோடி அலை. விருதுநகர் தொகுதியில் மோடி அலை, வைகோ அலை என்று இரண்டு அலைகள் இருக்கிறது.
பட்டாசு தொழில் பாதிப்பு
அண்மையில் மத்திய அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பு நடைமுறைக்கு வந்தால் பட்டாசு தொழில் மிகவும் பாதிக்கப்படும். சீனாவிலிருந்து பட்டாசுகள் அதிக அளவில் இறக்குமதி செய்தால் இங்குள்ள பட்டாசு தொழிற்சாலைகள் இயங்க முடியாத நிலை ஏற்படும். இந்த ஊரே பட்டாசு தொழிற்சாலையை நம்பித்தான் இருக்கிறது.
அச்சகம், தீப்பெட்டித் தொழில்
அதோடு அச்சகம் மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளும் இருக்கிறது. பட்டாசு தொழிலைத் தொடர்ந்து மற்ற தொழில்களும் பாதிக்கப்படும். அதனால் இங்குள்ள மக்களின் வாழ்வாதரம் பாதிக்கப்படும் சூழ்நிலை இருக்கிறது.
மாற்றம் வரும்
வைகோ அவர்கள் எம்.பி.-யாக வந்தால், இதுபோன்ற சட்டங்கள் அமலுக்கு வராது. ஒருவேளை வந்தாலும்கூட, குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் அதை மாற்றி அமைக்கக்கூடிய திறமை அவருக்கு இருக்கிறது. நாளைக்கு அமையக்கூடிய மோடி அரசில் அவருக்கு என்ன செல்வாக்கு இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிய வரும்.
சிவகாசி தீப்பெட்டி
இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற உண்ணாவிரதத்தில் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் திரண்டிருந்தார்கள். அவர்களிடம் பயம் கலந்த அச்சம் தென்பட்டது. இதுவரைக்கும் ஒரு வாரத்துக்கும் மேலாக பட்டாசு ஆலைகள் மூடியது நிகழ்வு இங்கு நடந்தது இல்லை. அன்றைக்கு நடந்த உண்ணாவிரதத்தில் பேசிய வைகோ அவர்கள், கண்டிப்பாக இதுபோன்ற சட்டங்கள் அமலுக்கு வராது. அப்படியே வந்தால், நமது சிவகாசி தீப்பெட்டியை வைத்துக் கொளுத்துவோம் என்று சொல்லியிருக்கிறார்.
மக்கள் நல திட்டங்கள்
இதுமட்டுமல்லாமல், இந்த விருதுநகர் தொகுதிக்கு அவர் அதிகமான திட்டங்களைக் கொண்டுவந்து செயல்படுத்தியிருக்கிறார். அவர் கொண்டுவந்த விருதுநகர்-கொல்லம் அகல ரயில் பாதை திட்டத்தின் மூலமாக இன்றைக்கு ஐந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ரயில் வசதி
சென்னையிலிருந்து தென்காசிக்குச் செல்கின்ற பொதிகை எக்ஸ்பிரஸ் மட்டுமல்லாமல், பகல் நேரத்தில் நான்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. கோவில்பட்டி இந்தத் தொகுதியில் இருந்தபோது அங்கு இரண்டு மேம்பாலங்கள் கொண்டுவந்தார். தனது சொந்தச் செலவில் கட்சி அடையாளமே இல்லாமல் மருதுவ முகாம்கள் நடத்தியிருக்கிறார்.
குடிநீர் பிரச்சினை
இந்தத் தொகுதியில் பட்டாசு தொழிற்சாலை பிரச்சினை உட்பட எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் முதலில் வந்து அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடியவர் வைகோ மட்டும்தான். இந்தப் பகுதியில் குடிநீர் பிரச்சினை அதிகமாக இருந்தது. குடிநீருக்காக மத்திய அரசின் நிதி ஒதுக்கப்பட்டது.
கட்சிகளைக் கடந்த தலைவர் வைகோ
வைகோ அவர்கள் சிறையில் இருந்தபோதுகூட இங்குள்ளவர்களிடம் நிதி ஒதுக்கப்பட்ட விவரத்தினை எடுத்துக்கூறி அதைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். இப்படி பல்வேறு திட்டங்களை கட்சிகளைக் கடந்து கொண்டுவந்து செயல்படுத்தியிருக்கிறார்.
எளிமையான தலைவர்
பொதுமக்கள் எளிதில் அனுகக்கூடிய தலைவர் வைகோ அவர்கள்தான். அவர் கட்சிகளைக் கடந்து நமக்காகப் பணியாற்றுகிறார். எனவே நாம் அவருக்காக ஓட்டுப்போட வேண்டும் என்று முடிவெடுத்து, மக்கள் அவரை ஒரு பொது வேட்பாளராகத்தான் பார்க்கிறார்கள்.
மாற்றம் வரும், வைகோ மகத்தான வெற்றி பெறுவார் என்கின்ற நம்பிக்கை இருக்கிறது என்றார் துரை வையாபுரி