தேச துரோக வழக்கில்.. ஜாமீன் வேணாம்னு நான் சொல்ல.. வைகோ அந்தர் பல்டி
தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட போது ஜாமீன் வேண்டாம் என வைகோ கூறியிருந்தார். இன்று ஜாமீனில் வெளி வந்த அவர் ஜாமீனில் வெளி வரமாட்டேன் நான் சொல்லவில்லை என்று பல்டி அடித்தார்.
சென்னை: கடந்த 2009ஆம் ஆண்டு சென்னை ராணி சீதை மன்றத்தில் குற்றம் சாட்டுகிறேன் என்ற தலைப்பிலான புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், தடை செய்யப்பட்ட இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் கருத்துகளை வெளியிட்டதாக கூறி தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் அப்போது கைது செய்யப்பட்ட அவர், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். தேசத் துரோக வழக்கு காரணமாக அவரது பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது.
தானாக முன் வந்து...
இந்நிலையில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் இந்த தேசத்துரோக வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் எனக் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வைகோ மனுத்தாக்கல் செய்திருந்தார். மேலும், தானாக முன் வந்து ஏப்ரல் 3 ஆம் தேதி காலை எழும்பூர் நீதிமன்றத்தின் 13வது குற்றவியல் நடுவர் கோபிநாத் முன்னிலையில் ஆஜரானார் வைகோ.
ஜாமீன் வேண்டாம்
அப்போது, நீதிபதியிடம் பிணையில் செல்ல விருப்பமில்லை என வைகோ தெரிவித்ததாக கூறியதையடுத்து, சிறையிலடைக்கப்பட்டார். 52 நாட்கள் சிறையில் இருந்த அவர், ஜாமீன் வேண்டும் என்று வைகோ இரண்டு தினங்களுக்கு முன் மனு செய்திருந்தார்.
ஜாமீனில் விடுதலை
அந்த மனுவை ஏற்று நீதிமன்றம் நேற்று அவருக்கு ஜாமீன் வழங்கியது. அதன்படி, சென்னை புழல் சிறையில் இருந்து வைகோ ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். 52 நாள் சிறைவாசத்துக்குப்பிறகு ஜாமினில் வந்த வைகோவை மதிமுக தொண்டர்கள் வரவேற்றனர்.
ஜாமீன் வேண்டாம் என்று சொல்லல..
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஜாமீன் வேண்டாம் என்று சொல்ல வில்லை என்று சிரித்துக் கொண்டே சொன்னார். மேலும், கட்சியின் நிர்வாகிகளின் வற்புறுத்தலின் பேரிலேயே ஜாமீன் மனு செய்து இன்று விடுதலையாகியுள்ளேன் என்றும் வைகோ தெரிவித்தார்.
அதிமுக அரசுக்கு பாராட்டு
வெளியே வந்த வைகோ முதல் வேலையாக அதிமுக அரசை பாராட்டி பேசினார். "இந்த அரசு ஓராண்டுக்குள் பல்வேறு நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறது. கல்வித் துறையில் நல்ல மாற்றங்களை செய்து வருகிறது. ரேங்க் வழங்குவதை ரத்து, 11ம் வகுப்பு பொதுத் தேர்வு, 100 மதிப்பெண்ணாக குறைத்திருப்பது என அனைத்தும் வரவேற்கத்தக்கது" என மனதார வைகோ பாராட்டினார்.