சிங்கப்பூரில் கைதான தமிழ் இளைஞரை விடுவிக்க வைகோ கோரிக்கை!

இதுகுறித்து அவர் பிரதமருக்கு அவர் தொலைநகலில், கடிதம் அனுப்பியுள்ளார்.
''சிங்கப்பூரில் போலீசாரின் பொய் வழக்கால் தண்டனையையும், சிறைவாசத்தையும் எதிர்கொண்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞரான பொறியாளர் அருண் கலியமூர்த்திக்கு நேர இருக்கும் ஆபத்தை தடுக்க இந்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த குமாரவேலு எனும் இளைஞர் வேலைக்கான விசா பெற்று சிங்கப்பூரில் கட்டிட வேலை செய்துக்கொண்டு இருந்தார். இவரது வாழ்க்கை மிகவும் துன்பமானது. இவரது தங்கை திருமணமானபின் கணவரோடு கேரளா சென்றார். கணவர் பகலில் வேலைக்குப் போயிருந்த நேரத்தில், சில இளைஞர்கள் வீடு புகுந்து இப்பெண்ணை கொலை செய்தனர். குமாரவேலுவின் தம்பி விபத்தில் இறந்துபோனார். தந்தையையும் இழந்த நிலையில், ஏழைத் தாயாருக்கு இவர்தான் ஆறுதலாக இருந்தார்.
டிசம்பர் 8ஆம் தேதி, சிங்கப்பூரில் வேலைக்குப் போய்விட்டு திரும்பிய குமாரவேலு பேருந்தில் ஏறியபோது, நடத்துனரும் மற்றும் இரண்டு பயணிகளும் இவரை அடித்து, பேருந்திலிருந்து கீழே தள்ளிவிட்டனர். பேருந்தின் சக்கரங்களில் சிக்கி பரிதாபகரமாக இறந்தார்.
இதனைப் பார்த்த மக்கள் கூச்சல் எழுப்பியதால், பேருந்தை ஓட்டுநர் நிறுத்தினார். அதிர்ச்சியில் உறைந்த தமிழர்கள் அங்கே திரண்டனர். 45 நிமிடம் வரை காவல்துறையினரும், ஆம்புலன்சும் அங்கு வரவில்லை.
பின்னர் காவல்துறையினர் வந்து பேருந்தின் சக்கரங்களுக்குக் கீழே நசுங்கிக் கிடந்த குமாரவேலுவை அதிலிருந்து விடுவிக்க முனையாமல், பேருந்து ஒட்டுநரையும், நடத்துனரையும் வெளியே அனுப்பி வைப்பதிலேயே ஈடுபட்டதால், ஆத்திரம் அடைந்த பொதுமக்களில் சிலர் சிமெண்டு காரைகளை எடுத்து வீசியதில், போலீஸ் வாகனங்கள் சேதமடைந்தன. இதனால், அங்கிருந்த தமிழர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சூழ்நிலையில், சம்பவம் நடந்த இடத்திற்கு சற்று தொலைவில், நள்ளிரவில் உணவு விடுதியில் உணவு அருந்திக்கொண்டு இருந்த பொறியாளர் அருண் கலியமூர்த்தி உள்ளிட்ட பத்து தமிழர்களை கைது செய்தனர்.
28 வயதான அருண் கலியமூர்த்தி, சென்னையில் பொறியாளர் பட்டம் பெற்று, ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பட்டம் பெற்றவர். 2009ல் சிங்கப்பூருக்குச் சென்று தகவல் தொழில்நுட்ப பொறியாளராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார்.
அவரது தந்தை கலியமூர்த்திக்கு இருதய நோய் ஏற்பட்டதாலும், தாயாருக்கு எலும்பு முறிவு சிகிச்சை நேர்ந்ததாலும் தமிழ்நாட்டுக்கு திரும்பினார்.
கடந்த 2013 நவம்பர் 28ல் சுற்றுலா விசா பெற்று சிங்கப்பூர் சென்ற அருணுக்கு, டிசம்பர் 8ஆம் தேதி இரவில் காவல்துறையால் துன்பம் நேர்ந்தது. சிங்கப்பூரில் 8ஆம் தேதி நடைபெற்ற சம்பவத்தில் அவர் ஈடுபடவில்லை.
நிரபராதியான அருண், தான் கைது செய்யப்பட்ட பின், தன்னை சிங்கப்பூர் காவல்துறையினர் இழிவான சொற்களால் வசைபாடியதாகவும், அடித்துத் துன்புறுத்தியதாகவும் நீதிமன்றத்தில் வாக்குமூலம் தந்தார்.
செய்தி அறிந்து பதறிப்போன அவரது தந்தை கலியமூர்த்தி, சிங்கப்பூருக்குச் சென்று அங்கு மனித உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டு இருக்கிற வழக்கிறஞர் ரவி மூலம் நீதிமன்றத்தில் முறையீடு செய்ததில், இந்திய பணம் பத்து லட்சம் ரூபாய் தொகையில் அருணுக்கு பிணை விடுதலை கிடைத்தது. ஆனாலும், அவரது கடவுச் சீட்டு அரசிடம் ஒப்படைக்கப்பட்டு, தினமும் காலையில் 9 மணிக்கு அதிகாரிகள் முன்பு கையெழுத்து இடவும், இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்கவும் நேர்ந்துள்ளது. வருகிற 29ஆம் தேதி பூர்வாங்க நீதி விசாரணை நடைபெறுகிறது.
காவல்துறையினர் புனைந்த பொய் வழக்கில் சிக்கி உள்ள நிரபராதியான இந்த இளைஞரின் எதிர்கால வாழ்க்கை இருளில் பாழாகிவிடக் கூடாது என்று கவலைப்படுகிறேன். இந்திய வெளிவிவகாரத்துறை மற்றும் சிங்கப்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் மூலமாக உடனடி நடவடிக்கைகள் மேற்கொண்டு அருண் கலியமூர்த்திக்கு நீதி கிடைக்கவும், தமிழ்நாடு திரும்பவும் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள பிரதமர் அவர்களை வேண்டுகிறேன்'' எனக் கூறியுள்ளார்.
மேலும், இந்தத் தொலைநகல் கடிதத்தை அனுப்பிவிட்டு, பிரதமர் அலுவலக உதவியாளரிடம் வைகோ இதுபற்றி கூறியபோது, தொலைநகல் கடிதம் பிரதமரின் கவனத்துக்கு வந்துள்ளது என அவர் தெரிவித்ததாகவும், வைகோ தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications