கைது பயம்: முன் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடும் வைகுண்டராஜன்?
சென்னை: வி.வி. மினரல்ஸ் நிறுவன அதிபர் வைகுண்டராஜன் முன்ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வைகுண்டராஜன் மீது 2012ம் ஆண்டு சி.பி.ஐ பதிவு செய்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்த சில தினங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து எந்த நேரத்திலும் அவர் கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வைகுண்டராஜன். உச்ச நீதிமன்றத்தில் கதவை தட்ட உள்ளாராம்.
தூத்துக்குடி வஉசி துறைமுக பொறுப்புக்குழு தலைவராக 30.4.2007 முதல் 30.4.2012 வரை இருந்தவர் சுப்பையா. இவர் தாய் ஜானகி, சகோதரர் ஜெயராமன் ஆகியோருடன் சேர்ந்து ரூ.8 கோடியே 23 லட்சத்து 93 ஆயிரத்து 501 அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், இதற்கு விவி மினரல்ஸ் நிறுவன பங்கு தாரர்களான வைகுண்டராஜன், இவரது சகோதரர் ஜெகதீசன் ஆகியோர் உதவியதாகவும் சிபிஐயின் லஞ்ச ஒழிப்பு போலீசார் 2012ல் வழக்கு பதிவு செய்தனர்.

மணலில் பிரித்தெடுத்த தாதுக்களை தூத்துக்குடி துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு அனுப்ப சுப்பையா அளித்த ஒத்துழைப்புக்கு லஞ்சமாக வைகுண்டராஜன் பல கோடிகளை கொடுத்தார் என்பது குற்றச்சாட்டு. இந்த வழக்கில் வைகுண்டராஜன் மற்றும் அவரது சகோதரர் ஜெகதீசன் உள்பட 8 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு விசாரணை நடத்தி வந்தது.
காரியாபட்டி அருகே இருந்த சுப்பையாவின் நிலத்தை வாங்க கொடுத்த விலையாக வைகுண்டராஜன் அதற்கு கணக்கு காட்டியுள்ளார். வங்கி செக் மூலமாக பரிவர்த்தனை நடந்ததால் சி.பி.ஐ சுலபமாக ஆவணங்களை திரட்ட முடிந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க கோரி, வைகுண்டராஜன், ஜெகதீசன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த வாரம் மனு செய்திருந்தனர். முன்ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு தெரிவிக்கவே மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக கூறப்படுகிறது. ஆனால் வைகுண்டராஜனுக்கு முன் ஜாமின் வழங்க உச்ச நீதிமன்றத்திலும் சி.பி.ஐ எதிர்ப்பு தெரிவிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications