நீ வைரம் அல்ல.. தமிழர்களுக்குக் கிடைத்த வரம்!!
பிறந்தது தாமரைக்குளம்.. குளத்திற்கொரு குணமுண்டு.. அதுபோலத்தான் இவரும்.. இவருக்கும் ஒரு குணமுண்டு.. அள்ள அள்ளக் குறையாமல் பாடல்களைக், கவிதைகளை அள்ளித் தந்த வானம் இது.
வைரமுத்து..
கருப்பு வைரமாக .. தமிழ் திரையுலகின் பாட்டு முத்தாக.. கண்ணதாசன் தந்த கவி போதையின் மிச்சமாக வந்தவர்.. இன்று தமிழர்களின் மொத்த பாடல் அடையாளமாக மாறி நிற்கிறார்.

தமிழ் சினிமாவில் பிலிம், கேமராவைத் தவிர்த்துக் கூட கற்பனை செய்து பார்த்து விடலாம்.. ஆனால் கண்ணதாசனையும், பின்னால் வந்த வைரமுத்துவையும் தவிர்த்துத் தனித்துப் பிரித்து ஒரு பாட்டைப் பார்த்து விட முடியாது.
இது ஒரு பொன் மாலைப் பொழுது.. இது கவிஞர் தந்த முதல் பாடல்.. தமிழ்த் திரைக்கு அவர் பிரசவித்த கன்னிப் பாடல்...
அன்று நிழல்களாக வந்த வைரமுத்து.. இசைஞானியோடு இணைந்து இரு கரம் கோர்த்துக் கொடுத்த முத்துக்கள் தான் எத்தனை எத்தனை..
வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும் திருநாள் நிகழும் தேதி வரும்
இவர்கள் இணைந்து உலா வந்த காலம் அத்தனையும் தமிழர்களின் இதயத்திற்கும், மனதிற்கும், செவிகளுக்கும் எப்போதும் நல்ல சேதிதான்!
நேற்றென் எதிரிலே நிழல்களின் நாடகம்
இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்தகாலம் நாளும் மங்களம்
இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜியம்
-எனக்கே தான்
அள்ள அள்ள குறையாத அமுதசுரபியாக இருவரும் சேர்ந்து படைத்த விருந்துகளை திரும்பத் திரும்பத் தின்றாலும் காது வலிக்காது.. இதயமும் சளைக்காது...!
முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ
அது மட்டுமா...!
நீல வானிலே வெள்ளி ஓடைகள்
ஓடுகின்றதே என்ன ஜாடைகள்
விண்வெளியில் விதைத்தது யார்
நவமணிகள்.....!
தாமரைக்கொடி தரையில் வந்ததெப்படி.. மாலை சூடும் வேளை.. ஏ குருவி சிட்டுக்குருவி...இதெல்லாம் நமது உணர்வுகளை நாடி பிடித்து அசைத்துப் பார்த்து துடிக்க வைத்த பாடல் வரங்கள்...!
ஞானியோடு சேர்ந்து விருந்து படைத்த வைரமுத்து பின்னர் இசைப் புயலோடு இணைந்தபோது மேலும் மேலும் விருந்துகள் வந்து குவிந்தன...
மங்கை மான்விழி அம்புகள் - என்
மார் துளைத்ததென்ன
பாண்டி நாடனைக் கண்டு - என்னுடல்
பசலை கொண்டதென்ன
நிலாவிலே பார்த்தவண்ணம்
கனாவிலே தோன்றும் இன்னும்
இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை
இடையில் மேகலை இருக்கவில்லை...
நமக்கோ கற்பனை முடியவில்லை.. நறுமுகையோடு நாமும் சேர்ந்து மலைத்து விழுந்த நாட்கள் அவை...!
உன் பார்வை பொய்தானா பெண்ணென்றால் திரைதானா
பெண் நெஞ்சே சிறைதானா சரிதானா...
பெண் நெஞ்சில் மோகம் உண்டு அதில் பருவத் தாபம் உண்டு
பேராசைத் தீயும் உண்டு ஏன் உன்னை ஒளித்தாய் இன்று
புதிர் போட்ட பெண்ணே நில் நில் பதில் தோன்றவில்லை சொல் சொல்
முடியாத இரவுகளாய்.. விடியாத காலைகளாய்.. விலகாத பகல் பொழுதுகளாய்.. நீண்டு கொண்டே போகும் கவிப் பேரரசுவின் பாட்டுக் களம்.. பாடல் வளம்.. !
இன்று அவருக்கு பிறந்த நாள்.. வாழ்த்துவோம்.. அவரது பாடல் வரிகளோடு இணைந்து!












Click it and Unblock the Notifications