அரசியலில் இருந்து திடீரென காணாமல் போன அதிமுகவின் முப்பெரும் தாய்க்குலங்கள்!
சென்னை: முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, வளர்மதி மற்றும் செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி ஆகியோரை இப்போது எந்த ஒரு பேட்டிகளிலும் பார்க்க முடிவதில்லை கவனித்தீர்களா?
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அக்கட்சியில் கோலோச்சிய பெண்கள் இம்மூவரும்தான். கோகுல இந்திராவும், வளர்மதியும் அமைச்சர்களாக இருந்தனர். சரஸ்வதி படிப்படியாக வளர்ந்து செய்தித்தொடர்பாளரானார்.
டிவி விவாதங்களில் இவர் அம்மா புராணம் பாடியதை பார்த்து அசந்துபோன ஜெயலலிதா, கடந்த சட்டசபை தேர்தலில் சரஸ்வதிக்கு பல்லாவரம் தொகுதியை ஒதுக்கினார்.

மூவருமே தோல்வி
ஆனால், இந்த மூவரின் கெட்ட நேரம், போட்டியிட்ட மூவருமே தோல்வியைத்தான் சந்தித்தனர். கோகுல இந்திரா, வளர்மதி ஆகியோர் அமைச்சர்களாக இருந்தும் தங்கள் தொகுதிகளில் தோற்றது அவர்களுக்கே அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

வளர்மதிக்கு ஏறுமுகம்
இதன்பிறகு மூவருமே தங்கள் இருப்பை காண்பிக்க அதிகமாக மீடியாக்களில் தோன்றினர். தொலைக்காட்சி ஊடகங்களோ பிற ஊடகங்களோ ஏதாவது பிரச்சினை குறித்து கருத்து கேட்டால் இவர்கள்தான் முன்வந்து சொல்வார்கள். இதையடுத்து தமிழ்நாடு பாடநூல் நிறுவனத் தலைவராக வளர்மதி நியமிக்கப்பட்டார்.

இட்லி பேட்டிகள்
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அப்பல்லோ டாக்டர்களே கொஞ்சம் அடக்கமாக பிரஸ் ரிலீஸ் செய்தபோதும், அம்மா இட்லி சாப்பிட்டார் என அதிரடி பேட்டிகளை கொடுத்து வந்தார் சி.ஆர்.சரஸ்வதி.

அரண்
சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஓபிஎஸ் தனி ஆவர்த்தனம் பாடியபோதும், சசிகலாவை சுற்றி அரணாக நின்றவர்கள் இம்மூவரும்தான். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்தார்கள் என சசிகலா, ஓபிஎஸ்-ஸ்டாலினை குறைகூறிய வரலாற்று தருணத்தின்போது அதே ஃப்ரேமுக்குள் காட்சியளித்தவர் கோகுல இந்திரா.

விரட்டியடிப்பு
சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டபோது, இம்மூவரும் சிறைக்கு பார்க்க வந்ததும், சிறை பாதுகாப்பு போலீசார் இவர்களை விரட்டியடித்ததும் இன்னும் அதிமுகவினர் மனத்திரையில் இருந்து அகலவில்லை.

தர்மசங்கடம்
ஆனால் சமீபகாலமாகவே இம்மூவரையும் டிவி பேட்டிகளில் பார்க்கமுடிவதில்லை. விவாதங்களிலும் பங்கேற்பதில்லை. இதற்கு காரணம், டிடிவி தினகரன் ஆதிக்கம்தான் என கிசுகிசுக்கிறார்கள். தினகரன் ஆதிக்கம் அதிகரித்த பிறகு, யார் பக்கம் பேசுவது என்ற 'தர்ம சங்கடத்தில்' இம்மூவரும் சிக்கிக்கொண்டனராம். ஒருகட்டத்தில் ஓ.பி.எஸ்சுக்கு பெருகிய ஆதரவை பார்த்து அவர் கோஷ்டிக்கு போக திட்டமிட்டதாக தெரிகிறது. ஆனால், இப்போது மூன்று கோஷ்டியும் இழுபறியில் இருப்பதால் எந்த பக்கமும் போகாமல் அடக்கி வாசிக்கிறார்களாம், இம்மூன்று பெண் தலைவர்களும்.












Click it and Unblock the Notifications