'ஜல் ஜல்' சலங்கையுடன் களை கட்டியது வல்லநாடு ரேக்ளா ரேஸ்!
தூத்துக்குடி: ஜல்லிக்கட்டு நடத்த தடை நீங்கியுள்ள நிலையில் ஜல்லிக்கட்டை சிறப்பாக நடத்த தென் மாவட்ட மக்கள் தயாராகி வருகின்றனர். 15ம் தேதி முதலில் மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. 17ம் தேதி உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்த நிலையில் புகழ் பெற்ற வல்லநாட்டு ரேக்ளா ரேஸுக்கு அங்கு மக்கள் வெள்ளோட்டம் பார்த்து மகிழ்ந்தனர்.
மதுரை மாவட்டத்தில் பாலமேட்டிலும், புகழ்பெற்ற அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டுக்கு தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 16ம் தேதி பாலமேட்டிலும், 17ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. அதற்கு முன்பாக 15ம் தேதி மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும். இதுதான் பொங்கல் விழாவின்போது முதலில் நடைபெறும் ஜல்லிக்கட்டாகும்.

இதேபோல நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் ரேக்ளா ரேஸ் வெகு பிரபலம். கோயில் திருவிழா நாளானறு கடைசி நாளில் ரேக்ளா ரேஸ் நடத்தப்படுவது வழக்கம். இதில் நெல்லை, தூததுக்குடி மட்டுமின்றி தேனி, கம்பம், பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ரேக்ளா வண்டிகள் பங்கு பெரும்.
ரேக்ளா ரேஸீக்கு தாய்வீடாக கருதப்படுவது தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடுதான். இங்குள்ள தம்புராட்டி அம்மன் கோயில் விழாவில் காளைகளை பூட்டி ரேக்ளா ரேஸ் வெகுசிறப்பாக நடைபெறும். இந்த நிலையில் கடந்த இரணடு ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேசுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மு்ன்தினம் மத்திய அரசு ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேசுக்கு அனுமதி அளித்தது. இதனால் வல்லநாடு கிராம மக்கள் உற்சாகம் அடைந்தனர். வேகமாக வண்டிகளுக்கு வர்ணம் பூச தொடங்கினர். தொடர்ந்து மாடுகளுக்கு கொம்புகளில் வர்ணம் பூசி, நெற்றியில் திலகமிட்டு தம்பூராட்டி அம்மன் கோவிலுக்கு அழைத்து வந்தனர். அங்கு ரேக்ளா ரேஸ் வண்டிகளுக்கும், காளைகளுக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது.
தொடர்ந்து வண்டிகளில் காளைகளை பூட்டி வெள்ளொட்டம் பார்த்தனர். ஜல், ஜல் என காளைகள் சலங்கை ஓலியுடன் துள்ளி குதித்து வர அதை பார்த்த கிராம மக்கள் உற்சாகத்தில் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications