ராகுல் காந்தி தகுதிநீக்கம்.. பாஜகவுக்கு எந்த சம்பந்தமுமில்லை.. கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன்
கோவை: ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதில் பாஜகவுக்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது குஜராத் பாஜக தொடர்ந்த வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து ராகுல் காந்தி எம்பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்தது.
இதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தனது சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி நேற்று சூரத் நீதிமன்றம் சென்று மேல்முறையீடு செய்தார். அந்த மனு மீது வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி விசாரணை நடக்கிறது.

ஜாமீன்
இந்த நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் அவருக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது. ராகுல் காந்தி, அதானி குறித்து மக்களவையில் பேசக் கூடாது என்பதற்காக திட்டமிட்டே பழைய வழக்கை தோண்டி எடுத்து சிறை தண்டனை பெற வைத்து அவசர அவசரமாக தகுதி நீக்கமும் செய்யப்பட்டதாக பாஜக மீது கடும் விமர்சனங்களை காங்கிரஸ் முன் வைத்துள்ளது.

இந்தியாவில் ஜனநாயகம்
பாஜகவின் செயல்பாடால் இந்தியாவில் ஜனநாயகம் கேள்விக்குறியானதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கோவையில் தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் கோவை மாநகராட்சியை பொருத்தவரை பல்வேறு கோரிக்கைகளை சட்டமன்றம் உள்பட பல இடங்களில் கொடுத்து வருகிறோம்.

குடிநீர் பிரச்சினை
கோவையில் குடிநீர் பிரச்சினை என்பது பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சில இடங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறை 30 நாட்களுக்கு ஒரு முறை என குடிநீர் வருகிறது. சிறுவாணியில் நீர் குறைவாக இருந்தால் லாரிகள் மூலம் மக்களுக்கு குடிநீர் வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். கோடைக்காலம் தீவிரமாக தொடங்கும் முன்பே குடிநீர் பிரச்சினை மிகப் பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது.

மாநகராட்சி நிர்வாகம்
மாநகராட்சி நிர்வாகம் அண்ணா மார்க்கெட் பகுதியில் சுமை தூக்கும் பணியாளர்களுக்கு தகுந்த ஏற்பாடு செய்து தர வேண்டும். கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் மத்திய அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. மாநில அரசும் பொதுமக்களுக்கு தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காவிரி டெல்டா பகுதிகளை அதிமுக அரசு ஏற்கெனவே வேளாண் மண்டலங்களாக அறிவித்துள்ளது.

நிலக்கரி சுரங்கங்கள்
எனவே அந்த பகுதிகளில் நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பது குறித்து மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும். ராகுல் காந்தி அவதூறு பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சட்டம் அதன் கடமையை செய்துள்ளது. இதற்கு தேவையில்லாமல் பாஜக மீது குற்றம்சாட்டுவது முறையானது அல்ல என வானதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications