ஜெ. பெயர் சூட்டிய 6 புலிக்குட்டிகளையும் இனி நாமளும் பார்க்கலாம்.. டிவியில்

இது குறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வண்டலூர் பூங்காவில் 3 வெள்ளைப் புலிகள் உள்பட 6 புலிக் குட்டிகள் அண்மையில் புதிதாகப் பிறந்தன. இந்த புலிக் குட்டிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா _ தாரா, மீரா, பீமா, ஆதித்யா, கர்ணா, உத்ரா எனப் பெயரிட்டார்.
பிறந்து ஓரிரு மாதங்களே ஆனதால் புலிக் குட்டிகளை பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வர இயலாது. தாய் புலிகளுடன் அவை தனித்து விடப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில் புலிக்குட்டிகளின் இருப்பிடத்தில் பார்வையாளர்களை அனுமதித்ததால் தாய் புலி கோபமடையவும், அமைதியற்ற நிலையை அடையவும் வாய்ப்புள்ளது.
பொதுவாக புலிக்குட்டிகள் வளர்ச்சியடைந்து தற்காப்பு ஆற்றலை அடையவும், சக விலங்குகளை எதிர்கொள்ளவும் குறைந்தது ஒரு வருடமாகும். அதன் பிறகே திறந்தவெளி அடைப்பிடங்களில் புலிக் குட்டிகளை விட முடியும். ஆனால் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள், முதல்வர் பெயர் சூட்டிய புலிக்குட்டிகளை பார்க்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.
அதைக் கருத்தில் கொண்டு புலிக் குட்டிகளின் அடைப்பிடங்களில் 4 சி.சி.டி.வி. கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் பதிவாகும் காட்சிகள் வெள்ளைப் புலிகளின் இருப்பிடங்களுக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள 27 இன்ச் (அங்குலம்) கணினி திரையில் பொதுமக்கள் பார்வைக்கு நேரலையாக ஒளிபரப்பப்படும்.
இதன் மூலம் புலிக்குட்டிகளின் செயல்பாடுகள், தாய் புலியின் பண்புகள், உணவு முறைகள் ஆகியவற்றை பார்வையாளர்கள் தெரிந்து கொள்ள முடியும். தேசிய அளவில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதல் முறையாக இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications