'திடீர் திருப்பம்..' வாணியம்பாடி கொலை வழக்கு.. கஞ்சா வியாபாரி டீல் இம்தியாஸ் நீதிமன்றத்தில் சரண்
திருப்பத்தூர்: வாணியம்பாடியில் மஜகவின் நிர்வாகி வசீம் அக்ரம் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான கஞ்சா வியாபாரி டீல் இம்தியாஸ் சிவகாசி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 7 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கச் சிவகாசி நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகரில் வசித்து வந்தவர் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் வசீம் அக்ரம்.
இவர் கடந்த 11 ஆம் தேதி அருகில் உள்ள பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
வாணியம்பாடியில் மஜக பிரமுகர் தலை துண்டித்துக் கொடூர கொலை.. என்ன நடந்தது.. வெளியான பகீர் பின்னணி?
வெட்டிக் கொலை
அப்போது அந்த வழியில் இன்னோவா காரில் வந்த மர்ம நபர்கள் அவரை ஓட ஓட விரட்டி, பொதுமக்கள் முன்னிலையில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். மேலும், அத்துடன் நிற்காமல் தலையைத் துண்டித்து எடுத்துக் கொண்டு வந்த காரிலேயே புறப்பட்டுச் சென்றார்கள். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது கொலை தொடர்பாக விசாரணை செய்யத் தனிப்படை அமைக்கப்பட்டன.
என்ன காரணம்
ஜீவா நகரை சேர்ந்த கஞ்சா வியாபாரி டீல் இம்தியாஸ் கஞ்சா பதுக்கி வைத்திருக்கும் இடம் தொடர்பான தகவலை சமூக ஆர்வலர் வசீம் அக்ரம், போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து டீல் இம்தியாஸுக்கு சொந்தமான இடத்தில் கடந்த ஜூலை 26ஆம் தேதி சோதனை செய்த போலீசார் 8 கிலோ கஞ்சா, பட்டாக்கத்திகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்த இருவரையும் கைது செய்தனர். இருப்பினும், டீல் இம்தியாஸ் உட்பட தலைமறைவாக இருந்த இருவரைப் போலீசால் கைது முடியவில்லை,
ஆய்வாளர் பணியிடை நீக்கம்
இந்நிலையில் தங்களைக் காட்டிக் கொடுத்ததால் ஆத்திரத்தில் இருந்த வசீம் அக்ரமை கூலிப்படையை வைத்து டீல் இம்தியாஸ் படுகொலை செய்துள்ளார். தலைமறைவாக இருந்த டீல் இம்தியாஸை சரியான நேரத்தில் கைது செய்யாததாலேயே இந்த கொலை நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமியை பணி இடை நீக்கம் செய்து, வேலூர் சரக டிஐஜி ஏ சி பாபு உத்தரவிட்டிருந்தார்.
6 பேர் சரண்
மேலும், கொலை செய்தவர்களைத் தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று மதியம் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த செல்வகுமார் அகஸ்டின், பிரவின்குமார், சத்யா என்கின்ற சத்தியசீலன் முனீஸ்வரன், அஜய் உள்ளிட்ட 6 பேரும் இன்று தஞ்சாவூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பாரதி முன்பு சரணடைந்தனர். இதனையடுத்து ஆறு பேரையும் வருகிற 20-ஆம் தேதி வரை கும்பகோணம் கிளை சிறையில் அடைக்க நீதிபதி பாரதி உத்தரவிட்டார்.
முக்கிய குற்றவாளி சரண்
இந்தச் சூழலில் இன்று மாலை வாணியம்பாடி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான கஞ்சா வியாபாரி டீல் இம்தியாஸ் சிவகாசி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 7 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கச் சிவகாசி நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
சட்டசபையில் விவாதம்
முன்னதாக நேற்று சட்டசபையிலும் இந்த கொலை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், "இந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை முறையாக நடைபெற்று வருகிறது. வாணியம்பாடி பகுதியில் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படும்" எனத் கூறியது குறிப்பிடத்தக்கது.