வரதட்சணை புகார்: ஐபிஎஸ் அதிகாரி வருண்குமாருக்கு ஜாமீன்!
சென்னை: வரதட்சணை புகார் வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரி வருண்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
அருப்புக்கோட்டையில் உதவி காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார், தன்னை காதலித்து ஏமாற்றியதாக வளசரவாக்கத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி, கடந்த 2012ஆம் ஆண்டு புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யவில்லை.

இதைத் தொடர்ந்து வருண்குமார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தக் கோரி பிரியதர்ஷினி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வருண்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.
வன்கொடுமைத் தடுப்புச்சட்டம்
அதன் பேரில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், மோசடி ஆகிய பிரிவுகளில் வருண்குமார் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
நீதிமன்றம் முன்ஜாமீன்
இதைத் தொடர்ந்து தனக்கும், தனது குடும்பத்தாருக்கும் முன்ஜாமீன் கோரி வருண்குமார் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதன் மீது அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றம் ரத்து
இந்த முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி பிரியதர்ஷினி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வருண்குமாருக்கு வழங்கிய முன் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
இதைத் தொடர்ந்து, முன்ஜாமீன் ரத்து செய்து 60 நாள்கள் ஆகியும் வருண்குமாரை காவல்துறையினர் கைது செய்யவில்லை எனக் கூறி, பிரியதர்ஷினி உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
சரணடைந்த வருண்குமார்
இந்த நிலையில் சைதாப்பேட்டை பெருநகர குற்றவியில் 11வது நீதிமன்றத்தில் வருண்குமார் சரணடைந்தார். இதைத் தொடர்ந்து வருண்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
நிபந்தனை ஜாமீன்
இந்நிலையில், ஐ.பி.எஸ் அதிகாரி வருண்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. விசாரணை அதிகாரி முன்பு வாரம் இரண்டு முறை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications