ஜனநாயகத்திற்கு சவால் விடுவது போல உள்ளது 'மோடி மஸ்தான்' ஆட்சி: ஈ.வி.கே.எஸ்.
மதுரை: ஜி.கே. வாசனுக்கு தான் ராகுல் காந்திக்கு நிகரானவர் என நினைப்பு உள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் இருக்கும் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,
காங்கிரஸ் கட்சி தான் நாட்டுக்காக தியாகம் செய்த கட்சி. இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி போன்றோர் தங்களின் உயிரை தியாகம் செய்தனர். உயிரை தியாகம் செய்து அர்பணிப்புடன் நாட்டை காக்கும் பெருமை காங்கிரஸுக்கு உண்டு. இன்றோ ஜனநாயகத்திற்கு சவால் விடுவது போன்று மோடி மஸ்தான் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மோடி சர்வாதிகாரியாக துடித்துக் கொண்டிருக்கிறார்.
காங்கிரஸை ஒழித்து ஆட்சிக்கு வந்துவிட்டோம் என்று மோடி நினைக்கிறார். மாநில கட்சிகளை ஒடுக்க துடிக்கும் மோடியின் கனவு ஒருநாளும் பலிக்காது. கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்துள்ளனர். ஆனால் தற்போது அது பற்றி ஏதாவது நடந்துள்ளதா?. காங்கிரஸ் அரசு கொண்டு வந்த 100 நாள் வேலை திட்டமே என்ன ஆனது என்று தெரியவில்லை.
காங்கிரஸின் திட்டங்களை மீண்டும் அறிமுகப்படுத்தி மோடி மக்களை ஏமாற்றுகிறார். தமிழகத்திலோ பன்னீர் செல்வத்தின் அரசு செயல்படாத அரசாக இருக்கிறது.
வாசன் தனிக்கட்சி துவங்குகிறார். அவர் தான் ராகுல் காந்திக்கு நிகரானவர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். வாசன் மீது நான் மரியாதை வைத்துள்ளேன். அவர் தான் எடுத்த முடிவு தவறானது என்பதை விரைவில் உணர்வார். அவர் அறிவித்தபடி வரும் 28ம் தேதி புதிய கட்சியின் கூட்டம் நடக்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அப்படியே அந்த கூட்டம் நடந்தாலும் 2016ம் ஆண்டு வரை அவரது கட்சி தாக்குப்பிடிக்குமா என தெரியவில்லை. யாராலும் காங்கிரஸை அழித்துவிட முடியாது.
வாசன் கட்சியில் இருந்து வெளியே சென்றதால் காங்கிரஸ் வலிமை அடையும் என்றார்.












Click it and Unblock the Notifications