ராஜபக்சேவுக்கு எதிராக திருமாவளவன் துக்கநாள்!
சென்னை: ஐ.நா. சபையில் ராஜபச்சே பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மனித உரிமை மீறல் குற்றத்திற்கு ஆளாகியுள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே ஐ.நா. பொதுசபையில் பேசுவதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

திமுகவினர் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்து துக்க தினம் அனுஷ்டித்து வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் கருப்புச்சட்டை அணிந்து திமுகவினருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இலங்கை அதிபர் ராஜபக்சே ஐ.நா. பொதுப்பேரவையில் உரையாற்றுவதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், டெசோ தீர்மானத்தின்படி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இன்று (25-9-2014) கருப்பு நாள் கடைப்பிடிக்கிறது. அதனையொட்டி காலை 10 மணியளவில் சென்னை, அசோக் நகர், நூறடிச் சாலையில் உள்ள கட்சியின் அலுவலகமான தமிழர் திடலில், தலைவர் தொல்.திருமாவளவன் கருப்புக்கொடி ஏற்றி கண்டன முழக்கங்களை எழுப்பினார். விடுதலைச் சிறுத்தைகள் ஏராளமானோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

கடந்த 23ம் தேதி விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் ராஜபக்சே ஐ.நா. பேரவை யில் பங்கேற்பதைக் கண்டித்து வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செப்டம்பர் 24ம் தேதி தமிழகத்திலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ்த் தேசிய அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்தும் கண்டனப் பேரணியிலும் விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications