விடுதலைச் சிறுத்தைகளின் 25 வேட்பாளர்களும் நாளை அறிவிப்பு... திருமா.
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் 25 வேட்பாளர்களின் பெயர்களும் நாளை அறிவிக்கப்படும் என்று கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
தேமுதிக, தமாகாவுடன் கூட்டணி அமைத்துள்ள மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள முக்கியக் கட்சிகளில் ஒன்று விடுதலைச் சிறுத்தைகள். இக்கட்சிக்கு கூட்டணியில் 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியும் இதில் அடக்கம். 17 தனித் தொகுதிகளில் இக்கட்சி போட்டியிடுகிறது. இக்கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்ய தற்போது நேர்காணலை நடத்தி வருகிறது. அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று முதல் நேர்காணல் நடந்து வருகிறது.
கட்சித் தலைவர் திருமாவளவன், பொதுச் செயலாளர்கள் சிந்தனை செல்வன், ரவிக்குமார், பொருளாளர் முகமது யூசுப் ஆகியோர் நேர்காணல் நடத்தினர். இன்றும் நேர்காணல் நடந்தது.
பின்னர் இதுகுறித்து திருமாவளவன் கூறுகையில், 25 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடக்கிறது. வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். நாளை வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications