காஸா இனப்படுகொலை: இஸ்ரேலைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்!
சென்னை: பாலஸ்தீனத்தில் காஸாவில் இஸ்ரேல் நிகழ்த்தி வரும் இனப்படுகொலையைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாலஸ்தீனம் மீதான இஸ்ரேல் தாக்குதலைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பில் சென்னை வள்ளூவர் கோட்டம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தொல்.திருமாவளவன் கண்டன முழக்கங்களை எழுப்பினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாலஸ்தீன் மீது இஸ்ரேல் இனவெறி தாக்குதல் நடத்துவது கண்டனத்துக்குரியது. இதுவரை நடந்த தாக்குதலில் 1500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன இஸ்லாமிய பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிர்ப்பலியாகியுள்ளனர்.

தற்போது போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளித்து விட்டு மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. இப்பிரச்சினையில் இந்திய அரசு தலையிட வேண்டும். ஐ.நா. அமைப்பு போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். அப்பாவி இஸ்லாமியர்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்படுவது நிறுத்தபட வேண்டும்.
சிங்கள இனவெறி அரசு அநாகரீகமாக காட்டுத்தனமான செயலை செய்துள்ளது. ராணுவ இணையதளத்தில் தமிழக முதல்வரை இழிவாக சித்தரித்து கேலி சித்திரம் வெளியிட்டிருப்பது கண்டிக்கதக்கது.

தமிழக மீனவர்களுக்காக அவர் எழுதும் கடிதத்தை விஷமத்தனமாக கிண்டல் செய்துள்ளது. இந்த அநாகரீகமான செயலை விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது.
இதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே முதல்வர் ஜெயலலிதாவிடம் வெளிப்படையான மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு தொல். திருமாவளவன் கூறினார்.












Click it and Unblock the Notifications