எங்களால் மநகூ உடைந்தது என்ற பழிச்சொல் வரக் கூடாது என்பதால் திமுக கூட்டத்தில் பங்கேற்கவில்லை- விசிக
மக்கள் நலக் கூட்டணியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான் உடைத்தது என்ற பழிவராமல் இருக்கவே திமுகவின் அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: மக்கள் நலக் கூட்டணி எங்களால் உடைந்தது என்ற பழிச்சொல் வரக் கூடாது என்பதாலே திமுக கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலர் ரவிக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக ரவிக்குமார் கூறியுள்ளதாவது:
சென்னையில் நேற்று நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் பங்கேற்ற பெரும்பாலானோர் திமுக பொருளாளர் ஸ்டாலின் கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றே கருத்து தெரிவித்திருந்தனர். இந்த கருத்தின் அடிப்படையில் மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களை திருமாவளவன் சந்தித்தார்.

அப்போது, திமுகவின் கூட்டத்தை புறக்கணித்தால் தமிழர் நலனில் அக்கறை இல்லாதவர்கள் என்பதாகிவிடும் என அவர்களிடம் சுட்டிக்காட்டினோம். ஆனால் எங்களது கருத்தில் மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களுக்கு உடன்பாடு இல்லை என தெரிவிக்கப்பட்டது.
மேலும் அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 சட்டசபை தொகுதிகள் தேர்தல் நடைபெறுவதால் திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்றால் நாம் அணி மாறிவிட்டோம் என கருத்து உருவாகும் என்ற கருத்தையும் அவர்கள் முன்வைத்தனர். அப்போது எங்கள் கட்சியின் விவசாய சங்க பிரநிதிகளையாவது அனைத்து கட்சி கூட்டத்துக்கு அனுப்ப அனுமதிக்க வேண்டும் என்று கேட்டோம்.

அப்படி திமுக கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றால் மக்கள் நலக் கூட்டணி உடைந்துவிட்டதாக கருத்து உருவாகும் என்றனர்.
இதனால் எங்களால் மக்கள் நலக் கூட்டணி உடைந்துவிட்டதாக பழிச்சொல் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே திமுக கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்கவில்லை.
இவ்வாறு ரவிக்குமார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications