சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியா? தொண்டர்களிடம் கருத்து கேட்க முடிவு- திருமாவளவன்

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் தொல். திருமாவளவன் கூறியதாவது:
சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கல்வி உரிமை மாநாடு ஆகஸ்ட் 17-ந்தேதி நடைபெறுகிறது. இதில் தனியார் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு, தமிழ்வழி கல்வி, ஆதிதிராவிடர் பள்ளிகளை சிறப்பு பள்ளிகளாக மேம்படுத்துதல் ஆகியவை பற்றி விளக்கப்படும்.
கச்சத்தீவு விவாகரத்தில் கடந்த காங்கிரஸ் அரசு எடுத்த முடிவையே இந்த அரசும் எடுத்து வருகிறது. இதை கண்டிக்கிறோம்.
தி.மு.க. கூட்டணியில் நாங்கள் தற்போது இருந்து வருகிறோம். வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதா? அல்லது தனித்து போட்டியிடுவதா? என்பது குறித்து ஆகஸ்ட் மாதம் 20-ந்தேதிக்கு பின்னர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்து உள்ளேன்.
ஜூலை 4-ந்தேதி தருமபுரி இளவரசன் நினைவேந்தல் நாளாகும். அந்நிகழ்ச்சிக்கு செல்ல தமிழக அரசு தடை போடுகிறது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதை திரும்ப பெற வேண்டும்.
அங்கு தலித் இளைஞர்கள் மீது பொய் வழக்கு போடும் போலீசாரை கண்டிக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தலித் அமைப்புகள், மற்றும் ஜனநாயக சக்திகள் கலந்து கொள்ள அனுமதி தரவேண்டும்.
இவ்வாறு தொல். திருமாவளவன் கூறினார்.