திமுகவில் 30 -40 வருஷமா ஒரே ஆள் தான் மாவட்டச் செயலாளர்! விசிகவில் அப்படியில்லை! - திருமாவளவன்
செங்கல்பட்டு: திமுகவில் 30, 40 வருஷமா ஒரே ஆள் தான் மாவட்டச் செயலாளராக இருப்பார் என்றும் அங்கே யாரும் இது பற்றி கேள்வி எழுப்ப முடியாது எனவும் பேசியிருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற விசிக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறியிருக்கிறார்.

அதிமுகவிலும் கிட்டத்தட்ட இதே நிலை தான் என்றும் தலைமை போடும் மாவட்டச் செயலாளருக்கு எதிராக அங்கே கேள்வி எழுப்ப முடியாது எனவும் கூறியிருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மட்டும் தான் மாவட்டச் செயலாளர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை மாற்றம் செய்யப்படுவதாக பெருமிதம் தெரிவித்தார்.
அண்மையில் வெளியான விசிக மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை தொடர்ந்து, பல இடங்களிலும் பதவி எதிர்பார்த்து கிடைக்காதவர்கள் பிரச்சனைகள் செய்து வந்தனர். குறிப்பாக கள்ளக்குறிச்சியில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட விசிக பெண் மாவட்டச் செயலாளர் மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத நிகழ்வும் நடந்தது.

இந்தச் சூழலில் மாவட்டச் செயலாளர் பதவி எதிர்பார்த்து கிடைக்காதவர்களை கூல் செய்யும் வகையில் திருமாவளவன் பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் 38 மாவட்டங்கள் உள்ள நிலையில் 4,140 பேர் மாவட்டச் செயலாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார்கள் என்றும் இவ்வளவு பேருக்கும் எப்படி தன்னால் மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்க முடியும் எனவும் நிலைமையை விளக்கிக் கூறியுள்ளார்.
நிர்வாகிகள் நியமனத்தில் பதவி கிடைக்காதவர்கள் ஏமாற்றம் அடைந்திருக்கக் கூடும் என்றும் உரிய தருணத்தில் வாய்ப்பு தேடி வரும் எனவும் தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications