ஐ.நா.சபையில் ராஜபக்சே பேச அனுமதி: தொல். திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!
சென்னை: ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை பேச அனுமதி அளித்ததைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஐ.நா.சபையில் வருகிற 25-ந்தேதி இலங்கை அதிபர் ராஜபக்சே பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக திருமாவளவன் முழக்கங்களை எழுப்பினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இனப்படுகொலை நடத்திய ராஜபக்சேவை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறும் நிலையில் ஐ.நா. மன்றத்தில் அவரை பேச அனுமதி கொடுத்திருப்பது தமிழர்களின் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல உள்ளது.
இந்திய அரசு இதில் தலையிட்டு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்போடு ராஜபக்சேவை ஐ.நா. மன்றத்தில் பேசுவதை தடுத்து நிறுத்த வேண்டும். சர்வதேச நாடுகள் பங்கேற்கும் ஐ.நா.மன்றத்தில் இனப்படுகொலை செய்த குற்றவாளி ராஜபக்சே பேசுவதை அனுமதிக்க முடியாது.

இதை கண்டித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தை கட்சி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. அதே போல் நாளை பல்வேறு அமைப்புகள் சார்பாக நடத்தப்படும் பேரணிக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
25-ந்தேதி கறுப்பு சட்டை அணிந்து எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி தமிழக மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அதனை வரவேற்கிறோம். நாங்கள் இன்று முதலே கறுப்பு சட்டை அணிந்துள்ளோம்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.












Click it and Unblock the Notifications