திருப்பதி வரும் ராஜபக்சேவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: திருமாவளவன்
சென்னை : நாளை திருப்பதி வரும் ராஜபக்சேவுக்கு கருப்பு கொடி காட்டுவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நாளை திருப்பதி வரும் இலங்கை அதிபர் ராஜபக்சே, நாளை மறுதினம் ஏழுமலையான் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். ராஜபக்சேவின் வருகைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. போராட்டங்களுக்குக் கூட அவை அழைப்பு விடுத்துள்ளன.
இந்நிலையில், இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தால், உலக நாடுகளின் பெரும்பான்மை ஒப்புதலோடு குற்றஞ்சாட்டப்பட்டு, சர்வதேச அளவில் விசாரிக்கப்பட வேண்டிய நிலையிலுள்ள சிங்கள இனவெறி கொண்ட ராஜபக்சே நாளை (9-ந்தேதி) திருப்பதி கோவிலுக்கு வர விருப்பதாக தெரியவருகிறது. லட்சக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த ராஜபக்சே, இந்தியாவுக்கு குறிப்பாக தமிழகத்திற்கு வெகு அருகிலுள்ள திருப்பதிக்கு வருவது தமிழ்நாட்டு மக்களை இளக்காரமாக கருதும் ஒரு போக்காகும்.
திருப்பதிக்கு வருவதும் தமிழ்நாட்டுக்கு வருவதும் ஒன்றுதான். எத்தனை லட்சம் தமிழர்களைக்கொன்றாலும், தமிழ்நாட்டு மக்களால் என்னை என்ன செய்து விடமுடியும் என்று தனது இறுமாப்பை வெளிப்படுத்துவதாக ராஜபக்சேவின் அணுகுமுறை உள்ளது.
அடுத்து சென்னைக்கே வருவேன் என்னை என்ன செய்ய முடியும் என்று கேட்பது போலவும் உள்ளது. எனவே ராஜபக்சே திருப்பதிக்கு வருவதையும், ராஜபக்சேவுக்கு இந்தியா அனுமதி வழங்குவதையும் மனித நேயமுள்ள எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
சர்வதேச குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படவுள்ள ராஜபக்சேவை திருப்பதி செல்ல அனுமதிக்கக்கூடாது என்று மத்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை பொருட்படுத்தத்தவறினால் ராஜபக்சேவின் வரவை எதிர்த்து ஆந்திர மாநில விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.