மோடி அரசே பதவி விலகு... உரக்கச் சொன்ன திருமாவளவன்
செல்லாத நோட்டு அறிவிப்பை மோடி அரசு திரும்ப பெறாவிட்டால் பதவி விலகவேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
மதுரை: செல்லாத நோட்டு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி டிசம்பர் 6ம் தேதி புதுவை போராட்டம் நடத்த போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை திரும்பப்பெறக்கோரி மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் மோடி அரசு பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தினர். போராட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற பிரதமரின் அறிவிப்பால் நாடு முழுவதும் பொருளாதார நிலையில் தடுமாற்றம் ஏற்பட்டு உள்ளது. ஏழை, எளிய, நடுத்தர மக்கள், அரசு ஊழியர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் சிரமப்படுகின்றனர் என்றார்.

84 சதவீதம் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்து விட்டு, அதை ஈடு செய்யும் வகையில் புதிய ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடாததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதற்கு பிரதமரே முழு பொறுப்பு என்றும் திருமாவளவன் கூறினார். இது இந்திய பொருளாதாரத்தை நெருக்கடி நிலைக்கு தள்ளியுள்ளது. இந்த நெருக்கடி, தடுமாற்றமானது இந்திய அரசியல் சட்டத்துக்கும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் ரூபாய் நோட்டுகள் குறித்த தனது அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும். புரட்சிகரமான திட்டம் என்ற பெயரில் எந்த முன்னேற்பாடுகளையும் திட்டமிடவில்லை.
10 சதவீதம் புழக்கத்தில் உள்ள ரூ.10, ரூ.20, ரூ.100 நோட்டுகளை வைத்து மக்களின் 100 சதவீத தேவைகளை எப்படி சமாளிக்க முடியும். கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்த பிரதமர், எந்த அடிப்படையில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை கொண்டு வந்தார்.
இதனால் கருப்பு பணம், பதுக்கல் பணம், சொத்து ஆகியவை எந்த வகையிலும் மீட்கப்படவில்லை. மாறாக என்ன நடக்க வேண்டாமோ அதெல்லாம் நடக்கின்றன. பலகோடி ரூபாய்களை பதுக்கி வைத்திருப்பவர்கள் கமிஷன் அடிப்படையில் பணத்தை மாற்றக்கூடிய தவறு நடைபெற்று வருகிறது. இந்த அறிவிப்பால் எதை பிரதமர் சாதிக்க விரும்பினாரோ அதற்கு நேர்மாறாக நடந்துள்ளது என்றும் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
கருப்புப் பண முதலாளிகள் யாரும் இந்த திட்டத்தால் பாதிக்கப்படவில்லை. வெளிநாட்டில் இந்தியர்களின் கருப்பு பண பட்டியலை மத்திய அரசு வெளியிட வேண்டும்.
இந்தியாவில் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தி, மீண்டும் மிசா சட்டம் கொண்டு வரக்கூடிய பேராபத்தும் உள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி டிசம்பர் 6ம் தேதி புதுவை போராட்டம் நடத்த போவதாகவும் திருமாவளவன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications