வைகோ என் அரசியல் "குரு"... தாயும் தந்தையுமானவர்.. அங்க கவசம் நான்...சொல்வது "அன்பு மகள்" வீரலட்சுமி
சென்னை: மதிமுக பொதுச்செயலர் வைகோ என்கிற "போராளியின் உடலையும் உயிரையும் காக்கின்ற அங்க கவசமாக" இருப்பேன் என்று மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகிய தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமி திடீரென ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தது வீரலட்சுமியின் தமிழர் முன்னேற்றப்படை. அந்த கூட்டணியில் மதிமுகவின் பம்பரம் சின்னத்தில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் வீரலட்சுமி.
இதனிடையே மக்கள் நலக் கூட்டணிக்கான ஆதரவை திரும்பப் பெறுவதாக நேற்று ஃபேஸ்புக்கில் வீரலட்சுமி அறிவித்திருந்தார். இது தொடர்பாக வைகோவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, வீரலட்சுமியின் தமிழர் முன்னேற்றப் படையை நாங்கள்தான் கூட்டணியில் இருந்து நீக்கினோம் என்று கூறியதுடன் காரணத்தை தெரிவிக்க மறுத்திருந்தார்.

இந்த நிலையில் வீரலட்சுமி இன்று தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வைகோவை புகழ்ந்து ஒரு பதிவை போட்டிருக்கிறார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசியலில் வீரலட்சுமிக்கு ஒரே குரு ஐயா வைகோ மட்டும் தான்
அவர் எமக்கு தாயும் தந்தையுமானவர் நான் வணங்ககூடியவர்.இதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை
தனிப்பட்ட முறையில் என்னுடைய சொந்த முயற்சியாலும் சொந்த செயல்திட்ட வடிவிலும் நாம் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளஅகில இந்திய தமிழர் முன்னேற்றக்கட்சியை தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக நிலைனிருத்த முயற்சிக்கிறேன்.
தமிழ் மண்ணில் மக்களாட்சி ஏற்பட்டு தமிழ் பெண்கள் சுயமாக கட்சி ஆரம்பித்து தமிழக அரசியலில் ஒரு நிலையான இடத்தில் வரமுடியவில்லை.

இந்த வெற்றிடத்தை நிரப்பவே நான் தமிழ் பெண்கள் சார்பாக முயற்சிக்கிறேன்.
இதற்காகவே நாம் தனியாகவே பயனிக்க தீர்மானித்து மக்கள் நல கூட்டணியின் ஆதரவு நிலையில் இருந்து பின்வாங்கினோம்.
தமிழ் மண்ணில் வைகோ என்ற ஒப்பற்ற ஈடுயினையற்ற போராளியின் உடலையும் உயிரையும் காக்கின்ற அங்க கவசமாக இந்த வீரலட்சுமி இருப்பேன்.
எம்மை துளைத்து தான் ஐயா வைகோ அவர்களின் அங்கத்தையும் எந்த ஒரு கொலை கருவியும் தீண்டமுடியும்.
வீரலட்சுமியை எதிர்கின்ற துளைக்கின்ற எந்த ஒரு கருவி இப்பூவுலகில் இன்னும் தோன்றவில்லை. தோன்றினாலும் எம்மை எதிர்க்க திராணி இருக்க போவதில்லை.
அன்புடன்
ஐயா வைகோ அவர்களின் அன்பு மகள்.
செந்தமிழினி கி.வீரலட்சுமி .
நிறுவனத்தலைவர்
தமிழர்முன்னேற்றப்படை
இவ்வாறு வீரலட்சுமி தம்முடைய பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications