உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்த மறுத்தால் அரசியல் சட்ட நெருக்கடி ஏற்படும்: கி.வீரமணி
சென்னை: காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடகா அரசு செயல்படுத்த மறுத்தால் அரசியல் சட்ட நெருக்கடி ஏற்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வீரமணி இன்று வெளியிட்ட அறிக்கை:
காவிரி நதிநீர்ப் பங்கீடுபற்றி நேற்று (30.9.2016) தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில், கருநாடகத்தின் அடாவடித்தனத்தையும், நடுவர் மன்றத் தீர்ப்பினை மதிக்காத போக்கினை எதிர்த்தும், தமிழ்நாட்டு காவிரி டெல்டா விவசாயிகள் சம்பா பயிரையாவது இம்முறை பயிர் செய்து அறுவடை செய்ய நீர் தேவை என்று வலியுறுத்தியும், தொடர்ந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் அமர்வு, முந்தைய விசாரணையில், 1.6000 கனஅடி தண்ணீர் (விநாடிக்கு) 10 நாள்களுக்குத் திறந்துவிட வேண்டும் என்று கருநாடக அரசுக்கு ஆணை பிறப்பித்தது. 2.நான்கு வாரங்களுக்குள் காவிரி நதி நீர் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு, மாநில அரசு பிரதிநிதிகளுடன் உடனடியாக அமைக்கவேண்டும் என்றும் ஆணையிட்டது!

அரசியலுக்கு தீனி
இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தையினை மத்திய அரசுமூலம் நடத்தி சுமுகத் தீர்வு காணவேண்டும் என்றும் அறிவுறுத்தி, அதன் முடிவினை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் தாக்கல் செய்யவேண்டும் என்றும் கூறியது. அடுத்த விசாரணை செப்டம்பர் 30 ஆம் தேதி என்றும் தள்ளிப் போட்டது! கருநாடக அரசு இவற்றை தவிர்க்கும் வகையில், குடிநீருக்கே எங்களுக்கு நீர்ப்பற்றாக்குறை. ஆகவே, தமிழ்நாட்டுக்குத் தண்ணீர்தரும் நிலையில் இல்லை என்று தீர்மானித்து ,(அங்குள்ள அரசியலுக்குத் தீனி போட்ட நிலையில்) உச்சநீதிமன்றத்தின் ஆணையை நிறைவேற்ற மறுத்துவிட்டது.

நாடகம் போல கூட்டம்
மத்திய அரசின் நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதி (இந்த அம்மையார் ஒரு சார்பான போக்கையே - அதாவது கருநாடகத்திற்குச் சாதகமான நிலைப்பாட்டினை இப்பிரச்சினைபற்றிக் கருத்துக் கூற வாய்ப்பு ஏற்பட்டபோதெல்லாம் கூறி வருவது வெளிப்படையான வேதனையாகும்) அவர்கள் தலைமையில் ஏதோ ஒரு சிலமணிநேர நாடகம் போல் கூட்டம் நடைபெற்றது,

உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
கருநாடக அரசு தமிழகத்திற்குத் தண்ணீர்தரமாட்டோம் என்ற தனது நிலைப்பாட்டில் பிடிவாதம் காட்டியது. மத்திய அரசு எந்த முடிவையும் கூறவில்லை என்பது மற்றொரு விசித்திரக் காட்சி! அதற்குப் பிறகுதான் நேற்று (30.9.2016) மீண்டும் உச்சநீதிமன்ற அமர்வு அவ்வழக்கினை விசாரித்து, கருநாடக அரசுக்கும், மத்திய அரசுக்கும் தாக்கீதுகளை - ஆணைகளைப் பிறப்பித்துள்ளது!

மீண்டும் உத்தரவு
இன்னும் 4 நாள்களுக்குள் (அக்டோபர்4ஆம்தேதிக்குள்)காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்தாக வேண்டும். (இது 3 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றிருக்க வேண்டிய ஒன்று; 90 நாள்கள் காலக்கெடு பலமுறை காற்றில் பறந்துவிட்ட நிலையில், உச்சநீதிமன்றம் இப்படி ஒரு ஆணை பிறப்பிக்கும் நிலை!) 2. 6000கன அடிநீர் விநாடிக்கு என்று அக்டோபர் ஒன்றாம் தேதியிலிருந்து அக்டோபர்6 ஆம் தேதி வரை கருநாடக அரசு தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும்.

எச்சரிக்கை
இதுவே கடைசி எச்சரிக்கை. கூட்டாட்சித் தத்துவத்தையும், நாட்டின் இறையாண்மை யையும்கருநாடக அரசு மதித்துச்செயல்படவேண்டும் என்று உத்தரவில் கூறியுள்ளது! உச்சநீதிமன்றத்தின் உத்தரவினை வரவேற்றுப் பாராட்டு கிறோம்!

அரசியல் சாசன நெருக்கடி
மத்திய அரசும், கருநாடகமும் இதில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒரு போக்கினைத்தான் இதுவரை கைக்கொண்டுள்ளன. அதற்கு ‘கழுவாய்' தேடிட இது ஒரு நல்வாய்ப்பு. இதிலும் அவர்கள் அலட்சியமோ, உச்சநீதிமன்ற ஆணையைச் செயல்படுத்த மறுத்தால் அது ஒரு அரசியல்சட்டநெருக்கடி(constitutional crisis) என்பதை ஏற்படுத்தி- தவறான முன்மாதிரியை உருவாக்கி- விபரீத விளைவுகளையும், விரும்பத்தகாத ஜனநாயக விரோத நடவடிக்கைகளை நியாயப்படுத்திடும் நிலைமையை உருவாக்கிடும் பேரபாயத்திற்கு அழைப்பு விடுவதாகிவிடும்.

உணர்ச்சி முக்கியம் அல்ல
எனவே, நல்ல முடிவுகளை, பிரமாணம் எடுத்த அரசியல் சட்ட காப்புகளை இனியாவது கருநாடக அரசு உறுதி செய்யட்டும். உணர்ச்சிகளைவிட அறிவுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டிய நேரம் இது! வாக்கு வங்கி அரசியல் அவர்களை ஒருபோதும் இதில் காப்பாற்றாது. நியாயங்கள் தோற்கக்கூடாது!
இவ்வாறு வீரமணி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications