ஜல்லிக்கட்டு: தமிழர் பண்பாட்டு மரபு, திராவிட கலாச்சாரத்துக்குக் கிடைத்த பெரு வெற்றி: வைகோ, வீரமணி
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பானது தமிழ்நாட்டு பண்பாட்டு மரபு மற்றும் திராவிட கலாச்சாரத்துக்குக் கிடைத்த வெற்றி என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள சட்டத்திற்கு எதிராக, விலங்குகள் நல அமைப்புகள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில், நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ரிஷிகேஷ் ராய், சி.டி. ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்து வந்தது. இந்த வழக்கின் விசாரணையின் போது, "ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் துன்புறுத்தப்படுகிறது என்றும், காளைகளை வற்புறுத்தி போட்டிகளில் பங்கேற்க வைக்கின்றனர்" என்றும் விலங்குகள் நல அமைப்புகளால் வாதிடப்பட்டது. இதையடுத்து, "ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரம் சார்ந்த நிகழ்வு. பாரம்பரியம், இறை வழிபாடு அம்சங்களுடன் தொடர்புடையது. இது தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்ததால், விலங்குகள் நல அமைப்புகளின் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று தமிழக அரசு வாதிட்டது.

அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி கே.என்.ஜோசப் தலைமையிலான அமர்வு வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது. அதன்படி ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க மறுத்துள்ள உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டு தொடர்பாக, 'தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த ஆவணங்கள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி என்பதை ஏற்றுக்கொள்கிறோம்' என்று கூறி உள்ளது. ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கிய ஒருமித்த தீர்ப்பில், "ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்றும், ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க வரவேற்கத்தக்க தீர்ப்பு ஆகும். இதன் மூலம் தமிழ்நாட்டின் பண்பாட்டு மரபு நிலைநாட்டப்பட்டு இருக்கிறது.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: ஜல்லிக்கட்டு நடத்தத் தடையில்லை என்று மாண்பமை உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசமைப்புச் சட்ட அமர்வு இன்று (18.5.2023) வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கதும் வரலாற்றுச் சிறப்புமிக்கதும் ஆகும். இது, சிந்துவெளி நாகரிகம் முதல் இன்று வரை தொடரும் திராவிடர் வரலாற்றுத் தொடர்ச்சியின் அடையாளத்திற்குக் கிடைத்த பெரு வெற்றியாகும்.
தமிழ்நாடு அரசின் வாதங்களை ஏற்றுக் கொண்டு, ஜல்லிக்கட்டைத் தடை செய்ய முயன்ற ஆரிய சூழ்ச்சிகளுக்கு சம்மட்டி அடி வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.
சட்டரீதியாக சரியாக எதிர்கொண்ட தமிழ்நாடு அரசுக்கு நமது பாராட்டுகள்! பண்பாட்டுப் படையெடுப்புகளுக்கு எதிரான திராவிடர் வரலாற்று, பண்பாட்டு அடையாள மீட்புப் போரில் இது ஒரு முக்கிய மைல் கல்லாகும்.












Click it and Unblock the Notifications