தமிழக-கேரளா எல்லையில் வாகனங்கள் நிறுத்தம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
செங்கோட்டை: கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருவதால் தமிழக-கேரளா எல்லையில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கேரள மாநிலம் பினராயி ஓலையம்பாலம் பகுதியை சேர்ந்தவர் உத்தமன். அவரது மகன் ரமித். ஆர்.எஸ்.எஸ்.தொண்டர். அவர் நேற்று காலை வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது காரில் வந்த கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது.
இந்த சம்பவம் தொடர்பாக கேரள மாநிலத்தில் பாஜகவினர் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதையடுத்து இன்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் தமிழக-கேரளா எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கேரளா எல்லை வழியாக செல்லும் கேரளா சுற்றுலாப் பேருந்துகள் ஆரியங்காவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தமிழக-கேரளா எல்லையில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு அங்குள்ள அரசு பேருந்து பணிமனையில் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கேரளா சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது. சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியவர்கள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி குடும்பத்தோடு சமையல் செய்து வருகின்றனர். பந்த் காரணமாக எல்லையோர பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.