மதிமுகவிலிருந்து விலகிய வேளச்சேரி மணிமாறன்.. இன்று முதல் திமுகவில்!
சென்னை: மதிமுகவிலிருந்து விலகிய வேளச்சேரி மணிமாறன் இன்று முறைப்படி திமுகவில் இணைந்து கொண்டார். சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு இவர் மதிமுகவை விட்டு விலகினார். அவர் திமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சட்டசபைத் தேர்தல் முடிந்த நிலையில் இன்று திமுகவில் வந்து சேர்ந்து கொண்டார்.
மதிமுகவில் தென் சென்னை மாவட்டச் செயலாளராக இருந்தவர் மணிமாறன். ஆனால் வைகோவுக்கு மிக மிக நெருக்கமான இடத்தில், முக்கிய இடத்தில் இருந்தவர் மணிமாறன்.

"மதிமுகவின் பேங்க்" என்று கூட செல்லமாக மணிமாறனை சொல்வார்கள். அந்த அளவுக்கு செல்வாக்கானவர், செலவு செய்ய அஞ்சாதவர். மதிமுக பொதுச் செயலர் வைகோவுக்கு, எடைக்கு எடை வெள்ளி கட்டி, தங்க பேனா, தங்க வாள் போன்ற விலை உயர்ந்த பரிசுகளை வழங்கி, அவரது தீவிர ஆதரவு மாவட்ட செயலராக வலம் வந்தவர் வேளச்சேரி மணிமாறன்.
மல்லை சத்யா வைகோவின் வலது கரம் என்றால் மணிமாறன் இடது கரமாக திகழ்ந்தவர். ஆனால் மக்கள் நலக் கூட்டணியை வைகோ உருவாக்கியதை மணிமாறன் விரும்பவில்லை. இதனால் மதிமுகவில் தனது செயல்பாடுகளை அவர் சுருக்கிக் கொண்டார். வேளச்சேரி தொகுதியில் மணிமாறனை போட்டியிடுமாறு வைகோ கூறியபோதும் அதை ஏற்கவில்லை, ஒதுங்கியிருந்தார்.
இந்த நிலையில் மே 15ம் தேதி கட்சியை விட்டு விலகுவதாக வைகோவுக்கு கடிதம் அனுப்பி விலகினார் மணிமாறன். அவர் திமுகவில் சேரப் போவதாக கூறப்பட்டது. ஆனால் சற்று தாமதமாக இன்றுதான் அவர் திமுகவில் இணைந்தார். அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் இணைந்தார்.












Click it and Unblock the Notifications