மின்சாரம் பாய்ந்து பலியான குரங்கு.. தாரை தப்பட்டை முழங்க நல்லடக்கம் செய்த கிராமத்தினர்!
வேலூர்: வேலூர் அருகே எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த குரங்கிற்கு, தாரை தப்படை முழங்க அப்பகுதி மக்கள் இறுதி ஊர்வலம் நடத்தினர்.
வேலூர் மக்கான் பகுதியில் 15-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித் திரிகின்றன. தினமும் வரும் அக்குரங்குகளுக்கு, அப்பகுதி மக்கள் பழங்கள், உணவுப் பொருள்களைத் தருவது வழக்கம். இதனால், அப்பகுதி மக்களும், குரங்குகளும் நண்பர்களாக பழகத் தொடங்கினர்.

இந்நிலையில், நேற்று காலை சீனிவாச நகர், அம்பேத்கர் நகர் பகுதியில் சில குரங்குகள் கட்டடங்களில் தாவி விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது எதிர்பாராத விதமாக ஒரு குரங்கு மின்கம்பத்தில் உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அந்தக் குரங்கு பரிதாபமாக உயிரிழந்தது.
இதைக்கண்ட மற்ற குரங்குகள், உயிரிழந்த குரங்கைச் சுற்றி நின்றவாறு சுமார் ஒரு மணி நேரம் கூச்சலிட்டன. பின்னர், குரங்குகள் விலகிச் சென்றவுடன், இறந்த குரங்கின் உடலுக்கு அப்பகுதி மக்கள் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர். ஒரு சில பெண்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.
அதனைத் தொடர்ந்து தாரை, தப்பட்டை முழங்க, அப்பகுதி மக்கள் குரங்குக்கு இறுதி ஊர்வலம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications