என்னை கொல்ல கூலிப்படையை ஏவிவிட்டுள்ள ராமதாஸ், அன்புமணி... பண்ருட்டி வேல்முருகன் பகீர் புகார்
நெய்வேலி: தம்மை கொல்ல பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கூலிப்படையை ஏவியுள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
கடலூர் மாவட்ட பா.ம.க. செயலராக இருப்பவர் ஆறுமுகம். இவர் மீது மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து தம் மீதான தாக்குதலுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், அவரது சகோதரர்கள் திருமால்வளவன், கண்ணன் உள்ளிட்டோர் காரணம் என போலீசில் ஆறுமுகம் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து வேல்முருகன், அவரது சகோதரர்கள் உட்பட 50 பேர் மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்தது.
பின்னர் வேல்முருகனின் சகோதரர் திருமால்வளவன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், பாமகவில் இருந்து விலகிச் சென்ற பலரும் கட்சி நடத்த முடியாமல் காணாமல் போய்விட்டனர்.
அதேபோல் வன்னியர் சங்கத்தின் பெயரால் ராமதாஸுக்கு எதிராக புகார் கூறியவர்களும் நிலைத்து நிற்கவில்லை. ஆனால் பாமகவைவிட்டு வெளியேறி கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தின் நலனுக்காக போராடி வருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. இதனை பாமகவால் குறிப்பாக ராமதாஸ், அன்புமணியால் ஜீரணிக்க முடியவில்லை.
இதனால்தான் சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் என்னை கொலை செய்ய பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ், காடுவெட்டி குரு ஆகியோர் கூலிப்படையை ஏவிவிட்டுள்ளனர். எங்கள் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தும் பாமகவினர் மீது புகார் கொடுத்தால் காவல்துறையினர் உடனே நடவடிக்கை எடுப்பதில்லை.
ஆனால் பாமகவினர் புகார் கொடுத்த உடனேயே நடவடிக்கை எடுக்கிறது காவல்துறை. அந்த அளவுக்கு காவல்துறையினர் பாமகவினரின் எடுபிடியாக செயல்படுகின்றனர் என்றார்.
செல்போன் டவர் போராட்டம்
இதனிடையே கடலூர், காஞ்சிபுரம், சேலம், தஞ்சாவூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல இடங்களில் வேல்முருகன், அவரது சகோதரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட புகாரை திரும்பப் பெறக் கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் செல்போன் டவர்கள் மீது ஏறி நின்று போராட்டம் நடத்தினர்.
அடுத்தடுத்த இந்த சம்பவங்களால் கடலூர் மாவட்டத்தில் பதற்றமான நிலைமை நீடித்து வருகிறது.