For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி : மத்திய அரசைக் கண்டித்து ஏப்.1 முதல் டோல்கேட் கட்டணம் தர மறுக்கும் போராட்டம்: வேல்முருகன்

மத்திய அரசைக் கண்டித்து ஏப்ரல் 1 முதல் டோல்கேட்களிலும் கட்டணம் தர மறுக்கும் போராட்டத்தை வேல்முருகன் அறிவித்துள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கசவடிகளிலும் (டோல்கேட்) சுங்கவரி தர மறுக்கும் போராட்டம் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான உச்சநீதிமன்றம் விதித்த ஆறு வாரக்கெடு நாளையுடன் முடிவடைகிறது. ஆனால் இதுவரை அந்த தீர்ப்பு மீது மத்திய அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Velmurugan calls for refusing Tollgate fee from April 1st

இந்நிலையில், அடுத்தகட்ட போராட்டத்திற்கு தமிழக எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விரைவில் போராட்டம்

அந்த அறிக்கையில், காவிரி மேலாண்மை வாரியம்தான் அமைக்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறது; காரணம், காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு சொல்லியது அதைத்தான். நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு குறிப்பிட்ட தண்ணீர் அளவில்தான் நான்கு மாநிலங்களுக்கும் மனக்குறை. மீளாய்வுத் தீர்ப்பில் அது மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி, காவிரி மீதான "உரிமை-பாத்தியத்தை" என்பது உலகளாவிய, இப்பேரண்ட, ஆம், இயற்கை விதிப்படியானது; அதில் உச்ச நீதிமன்றமல்ல, எந்த நீதிமன்றமுமே தலையிட முடியாது.

மோடி அரசுக்கு எச்சரிக்கை

மீளாய்வுத் தீர்ப்பில் காவிரி நீர் எந்த மாநிலத்துக்கும் சொந்தமில்லை என்று சொல்லியிருப்பது அப்பட்டமான சட்ட மீறல். காவிரி தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய இந்த நான்கு மாநிலங்களுக்கே சொந்தம். மாநிலங்களை இப்படி வரிசைப்படுத்துவதற்குக் காரணம், "காவிரி உடலின் பெரும் பகுதி தமிழ்மண்" என்பதால்தான். அப்படியிருக்க, காவிரித்தாயைப் "அழிக்க " நினைக்கும் கர்நாடகாவின் கயமைத்தனத்திற்கு துணைபோவதென்ன ஒன்றிய பாஜக மோடி அரசு எச்சரிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

காவிரி மீதான உரிமை

தமிழ்நாட்டுக்கும் புதுச்சேரிக்குமான காவிரி மீதான உரிமை பாத்தியத்தைக் கத்தரித்துவிடுவதும்; காவிரியை முற்றாகக் கையாளும் உரிமையை கர்நாடகாவுக்கு விட்டுவிட்டு, காவிரி உட்பட நீராதாரங்கள் மொத்தத்தையும் கார்ப்பொரேட் மயமாக்கிவிடுவதும்தான் மோடியின் மூளைத்திட்டம். அதனால்தான் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்காமல் தமிழகத்தை வஞ்சிக்க செய்கிறது மோடி அரசு. இதைத் தெரிந்து புரிந்து தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும் தமிழக அதிமுக எடப்பாடி பழனிசாமி அரசு.

சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம்

இந்த நிலையில்தான், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், அதன்பின் டெல்லிக்கு தமிழ்நாட்டில் வேறென்ன வேலை இருக்க முடியும் என்று கேட்கிறோம். அப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பட்சத்தில் டெல்லிக்கு இங்கு எந்த வேலையும் இல்லை என்றே சொல்கிறோம். அதனால் அதனை நடைமுறைப்படுத்தும் வேலையில் இறங்குவோம் என்பதைச் சொல்லிக்கொள்கிறோம். அதன் தொடக்கமாக, இங்கு ஒரு ராப்பகல் கொள்ளையே நடத்திக்கொண்டிருக்கும் ஒன்றிய அரசின் சுங்கச்சாவடிகள் ஏப்ரல் 1 தேதி முதல் சுங்கவரி தர மறுக்கும் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கிறோம்.

சுங்ககட்டணம் உயர்வு

இதற்காக அல்லாமலும் இந்தச் சுங்கச்சவடிகளை அப்புறப்படுத்த வேண்டியதற்குக் காரணங்கள் உண்டு. தமிழ்நாட்டையே தன் ஆதிக்கத்தின் கீழ் வைத்து கசக்கிப் பிழிவதற்கும் சூறையாடுவதற்குமான அத்தாட்சிதான் இந்தச் சுங்கச்சாவடிகள் நடத்திவரும் ராப்பகல் கொள்ளை. மொத்தம் 45 சுங்கசாவடிகள் தமிழ்நாட்டில். ஆண்டுதோறும் சுழற்சி அடிப்படையில் செப்டம்பர், ஏப்ரல் மாதங்களில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. சாலைகளின் தன்மையைப் பொறுத்து 7 முதல் 10 சதவீதம் வரை கட்டண உயர்வு செய்யப்படுகிறது.

காட்டுமிராண்டித்தனமான கொள்ளை

கார்ப்பொரேட் கொள்ளைசாலைப் பராமரிப்புக்கென்றுதான் ஆண்டு தோறும் இந்தக் கட்டண உயர்வு. ஆனால் எந்தப் பராமரிப்பும் கிடையாது. சுங்கச்சாவடிகளில் ஆம்புலன்ஸ் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பது விதி; ஆனால் எந்தச் சாவடியிலுமே அது கிடையாது. குடிநீர் கழிப்பறை, போதிய அளவு மின்விளக்குகளாவது உண்டா என்றால் அவையும் இல்லை. இப்படி காட்டிமிராண்டித்தனமான கார்ப்பொரேட் கொள்ளை நடப்பதை நாகரிகமும் மனிதாபிமானமும் உடைய மனிதர்களால் எப்படி பார்த்துக்கொண்டிருக்க முடியும்?

சுங்கச்சாவடிகள் தகர்ப்பு

மகாராஷ்டிர மாநிலம்தான் முதலில் இதற்கு எதிர்வினையாற்றியது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மாநிலமெங்கும் அல்ல, மும்பையிலுள்ள ஒரு 5 சுங்கச்சாவடிகளில் மட்டும் 2012ல் எடுத்த கணக்குப்படி, ஒப்பந்ததாரர் செய்த முதலீடு ரூ.2,100 கோடி; 2017க்குள் அவர் வசூலித்த சாலை வரி மூலம் ரூ.14, 524 கோடி. அதாவது அவர் அடித்த கொள்ளை ரூ.12,424 கோடி. இந்த ராப்பகல் கொள்ளை ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா அந்த சுங்கச்சாவடிகளைத் தாக்கி சூறையாடியதையடுத்தே வெளிச்சத்துக்கு வந்தது.

ஒப்பந்தகாலம் முடிந்த பிறகும் வசூல்

இந்த ராப்பகல் கொள்ளையிலும் அதிபயங்கரம் என்னவென்றால், காலக்கெடு முடிந்த பின்னரும் இந்த வசூல் கொள்ளை தொடர்வதுதான். உதாரணத்திற்கு, அதே மும்பையில், காம்கோன்- ஜல்னா புறவழிச்சாலை; மும்பை- புனே அதிவிரைவு நெடுஞ்சாலை ஆகியவற்றில் காலக்கெடு முடிந்த பின்னரும் வரி வசூல் நடந்தது; அப்போது சாலைப் பராமரிப்பு 60 சதவீத அளவுக்கே நடந்திருந்தது. ஆனால் பல்லாயிரம் கோடிகள் சுருட்டப்பட்டிருந்தது. இதை 2013ல் மகாராஷ்டிர அரசின் பொதுக்கணக்குக் கமிட்டி அறிக்கையே சொல்லியது.

கட்டண முறைகேடு

தமிழ்நாட்டிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சுங்கசவடிகளில் பல முறை போராட்டங்களை நடத்தி உள்ளது. நம் தமிழ்நாட்டிலும் கிருஷ்ணகிரி - தொப்பூர் நாற்கர சாலைக்கு செலவிட்டது ரூ.160 கோடி. இதில் சராசரி மாதம் வசூலாகும் சுங்கவரி ரூ.3.5 கோடி. 25 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் இது. அப்படியென்றால் கொள்ளையை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். சென்னை மாநகரத்தில் சட்டதிற்க்கு புறம்பாக சில சுங்கசவடி செயல்பட்டு வருகிறது.

சுங்கச்சாவடிகளில் போரட்டம்

தமிழகத்தின் சில பகுதிகளில் குறுகிய தொலைவில் சுங்கசவடி சட்டதிற்க்கு புறம்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ராப்பகற்கொள்ளையைத் தடுக்க ஒரே வழி அந்தக் கொள்ளைக்கூடங்களை அப்புறப்படுத்துவதுதான். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அன்பார்ந்த தமிழக மக்களே ஏப்ரல் 1 தேதி முதல் சுங்கவரி தர மறுக்கும் போராட்டத்தை தொடங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் போராட்டத்தில் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Velmurugan calls for refusing Tollgate fee from April 1st. Tamizhaga Valurimai Katchi Leader Velmurgan Condemns Central Government for not taking action on Cauvery management Board setup issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X