உளுந்தூர்பேட்டை சுங்கசாவடி போராட்டம்: வேல்முருகன் உட்பட 267 பேர் விடுதலை - 11 பேர் மீது வழக்கு
உளுந்தூர்பேட்டை சுங்கசாவடி போராட்டத்தில் ஈடுபட்ட வேல்முருகன் விடுதலை செய்யப்பட்டார்.
Recommended Video
விழுப்புரம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உட்பட 267 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக அகற்றக்கோரியும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி முன்பு வரிகொடா இயக்க போராட்டம் நடைபெற்றது.
இந்த முற்றுகை போராட்டம் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில், 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதுடன், சுங்கச்சாவடி வசூல் மையங்களையும் அடித்து நொறுக்கினர். இதையடுத்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட வேல்முருகன் உட்பட 28 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து, வேல்முருகன் மீது 7 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்ததை அறிந்த அக்கட்சியினர், உளுந்தூர்பேட்டையில் செல்போன் கோபுரத்தின் மேல் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும் போராட்டக்காரர்கள் சமாதானம் ஆகவில்லை.
அதனால் போலீசார், சுங்கச்சாவடி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 11 பேரை மட்டும் கைது செய்து சிறையில் அடைப்பதாகவும், மற்ற 267 பேரை விடுவிப்பதாகவும் உறுதியளித்தனர். அதன் பேரில் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தியவர்கள் கீழே இறங்கினர்.
இதையடுத்து வேல்முருகன் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். சுங்கச்சாவடி தாக்குதலில் ஈடுபட்ட 11 பேர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.