தமிழக ஆளுநருடன் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு திடீர் ஆலோசனை
சென்னை: தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
முதல்வர் ஜெயலலிதா 19 நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களை சந்தித்து ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் சென்னைக்கு வருகை தந்து ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். புதுவை முதல்வர் நாராயணசாமி, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் நேற்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.
அதேபோல் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவும் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். இதனிடையே இன்று திடீரென ஆளுநர் வித்யாசாகர் ராவை வெங்கையா நாயுடு சந்தித்து பேசினார்.
ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் இடைக்கால முதல்வர் ஒருவரை நியமிக்க வேண்டும் என மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவை வெங்கையா நாயுடு சந்தித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications