தகுதி நீக்க வழக்கில் வெளியாகிறது தீர்ப்பு.... 89 எம்.எல்.ஏக்களை கொண்ட திமுக என்ன செய்ய வாய்ப்பு?
89 எம்.எல்.ஏக்களைக் கொண்ட திமுக என்ன செய்யப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பு.
Recommended Video
சென்னை: 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வெளியாக இருக்கிறது. இத்தீர்ப்பை முன்வைத்து திமுக அடுத்த கட்ட வியூகங்களுக்கு தயாராகி வருகிறது.
அதிமுகவின் 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டால் 18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறும். தற்போதைய நிலையில் அதிமுகவுக்கு சட்டசபையில் 110 (சபாநாயகரையும் சேர்த்து 111) எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
அதேநேரத்தில் திமுக 89; காங்கிரஸ் 8; முஸ்லிம் லீக்- 1 என அக்கூட்டணி 98 எம்.எல்.ஏக்களைக் கொண்டிருக்கிறது. இடைத்தேர்தல் நடைபெற்றால் திமுக கணிசமான தொகுதிகளைக் கைப்பற்ற வியூகம் வகுக்கும்.
அப்படி திமுக பெரும்பான்மை தொகுதிகளில் வென்றால் அதிமுக அரசு கவிழ்ந்து திமுக ஆட்சி அமைக்கும் சூழ்நிலை உருவாகும். இதைத்தான் திமுக விரும்புவதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டால் சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக கொண்டு வர முயற்சிக்கும். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் எடப்பாடி ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லை என்பதை நிரூபிக்க திமுக முயற்சிக்கும்.
அத்துடன் 18 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் திமுக ஆட்சி அமைக்க முயற்சிக்கலாம் அல்லது அது சாத்தியப்படாத சூழலில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளவும் திமுக தயாராகலாம் என்பதுதான் அக்கட்சியின் நிலைப்பாடாக இருக்கிறது.