"மேகம் கருக்கையிலே" ..புகழ், காமெடி நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்
பழம் பெரும் நடிகர் வெள்ளை சுப்பையா உடல் நலக்குறைவால் காலமானார்.
Recommended Video

சென்னை: பழம் பெரும் நடிகர் வெள்ளை சுப்பையா உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80.
திரையில் பார்க்கும் காமெடி நடிகர்கள் வேறு, சொந்த வாழ்க்கையில் அவர்களின் நிலை வேறு என்பதற்கு அடுத்த உதாரணம்தான் வெள்ளை சுப்பையாவின் மரணமும். பெரும்பாலும் திரையில் பார்க்கும் காமெடி நடிகர்களின் வாழ்க்கை வறுமை கலந்த கண்ணீருடன்தான் முடிவு பெறுகிறது.

200 படங்களுக்கும் மேல்
வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்காரன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் சுப்பையா. வெள்ளை சுப்பையா நடிக்க வந்த புதிதில் சுப்பையா என்ற பெயரில் நிறைய பேர் இருந்தார்கள்.

வெள்ளை சுப்பையா
எஸ்.வி.சுப்பையா, கருப்பு சுப்பையா என்ற பல நடிகர்கள் எம்ஜிஆர் காலத்திலிருந்தே நடித்து வந்தவர்கள். அதனால் நடிக்க வந்த புதிதில் சுப்பையா, தனது பெயரை வெள்ளை சுப்பையா என்று மாற்றிக் கொண்டார்.

வாழைப்பட காமெடி
இவர் கவுண்டமணி, செந்தில், வடிவேலு மட்டுமல்லாது 3 தலைமுறை நடிகர்களோடு நடித்தவர் .‘மேகங் கருக்கையிலே புள்ள தேகம் குளிருதுடி' என்ற பாடலில் ஸோலாவாக ஆடி பாடி நடித்து கலக்கினார். இயக்குனர் வி.சேகரின் ஆஸ்தான நடிகர். கவுண்டமணியின் வாழைப்பட காமெடியில் குரூப்பில் வெள்ளை சுப்பையாவும் பிரதானம்.

கழுத்தில் கட்டி
கொஞ்ச வருடங்களாகவே இவருக்கு சினிமா வாய்ப்புகள் இல்லை. அதனால் தனது சொந்த ஊரான புஞ்சை புளியம்பட்டிக்கு வந்துவிட்டார். இந்த ஊர் மேட்டுப்பாளையம் அருகே உள்ளது. அப்போது நான்கைந்து வருடங்களுக்கு முன்பு இவருக்கு கழுத்தில் ஒரு கட்டி வந்தது. பரிசோதனைக்கு பின்னர் அது கேன்சர் கட்டி என தெரியவந்தது. ஆனால் சிகிச்சைக்கு கையில் பணம் இல்லாமல் அவதிப்பட்டார். இதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் கூட நிதியுதவி கேட்டிருந்ததாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது.

காலமானார்
இந்நிலையில், உடல் நலக்குறைவால் அவதியுற்ற நிலையில் இன்று காலமானார். வெள்ளை சுப்பையா மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர். கோடி கோடியாக புரளும் சினிமா துறையில் சில தொழிலாளர்களின் இறுதிகட்டம் இப்படித்தான் இருக்கும்போல!












Click it and Unblock the Notifications