பொள்ளாச்சி மகாலிங்கம் உடல் நாச்சிமுத்து பாலிடெக்னிக் வளாகத்தில் அடக்கம்
சென்னை மயிலாப்பூரில் நேற்று நடைபெற்ற வடலூர் வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம், திடீரென மயக்கமடைந்தார். இதனையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், முன்னரே உயிர் பிரிந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
அவரது உடலுக்கு திமுக பொருளாளர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திரை உலக பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
பொள்ளாச்சி மகாலிங்கத்தின் உடல், விமானம் மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், பொள்ளாச்சி, நச்சிமுத்து கவுண்டர் தெருவில் உள்ள சக்தி நிலையம் என்ற அவரின் வீட்டில் வைக்கப்பட்டது.
ஏராளமான பொதுமக்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கவியரசு வைரமுத்து உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து அவரது உடல் நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்வி நிலைய வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. இன்று மாலை 6 மணியளவில் அவரது உடல் பால்டெக்னிக் வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டு சமாதி எழுப்பப்பட்டது.