குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து சசிகலா விரைவில் அறிவிப்பார்: வெற்றிவேல் எம்எல்ஏ!
குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து சசிகலா விரைவில் அறிவிப்பார் என தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து சசிகலா விரைவில் அறிவிப்பார் என தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு ஆதரவு என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்ததை ஏற்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதிமுக அம்மா அணியில் ஏற்பட்டுள்ள மோதலும் குழப்பமும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதிமுக அம்மா அணியின் அதிகார மையம் யார் என்ற குழப்பமும் அதிகரித்துள்ளது.
பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்துக்கு ஆதரவு தருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன்தினம் அறிவித்தார். ஆனால் ஆதரவு குறித்து பொதுச்செயலாளர்தான் முடிவு செய்வார் என டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
சசிகலா விரைவில் அறிவிப்பார்
இந்நிலையில் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரான வெற்றிவேல் எம்எல்ஏ சென்னை அடையாறு இல்லத்தில் டிடிவி தினகரனை இன்று நேரில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு கொடுப்பது என்பது குறித்து சசிகலா விரைவில் அறிவிப்பார் என்றார்.
3வது இடத்தில்தான் எடப்பாடி
மேலும் பொதுச்செயலாளர் அறிவிப்புதான் முக்கியமானது என்றும் அவர் கூறினார். கட்சியில் சசிகலா, தினகரனுக்கு அடுத்த இடத்தில் தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
எடப்பாடி அறிவிப்பை ஏற்கமுடியாது
எடப்பாடி பழனிச்சாமி வெறும் அமைப்புச்செயலாளர் தான் என்றும் வெற்றிவேல் எம்எல்ஏ கூறினார். பாஜகவுக்கு ஆதரவு என எடப்பாடி அறிவித்ததை ஏற்க முடியாது என்றும் வெற்றிவேல் எம்எல்ஏ திட்டவட்டமாக தெரிவித்தார்.
உச்சக்கட்ட குழப்பம்
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை பாஜகவுக்கு ஆதரவு என்பது பொதுச்செயலாளர் மற்றும் முதல்வர் சேர்ந்து எடுத்த முடிவு என்று கூறியிருந்தார். இந்நிலையில் வெற்றிவேல் எம்எல்ஏ கூறியிருப்பது, குடியரசுத் தலைவர் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளார் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.