வால்பாறையில் பாய்ந்து வந்த சிறுத்தை.. வளர்ப்பு நாயால் நொடியில் உயிர்தப்பிய சிறுவன்..அதிர்ச்சி வீடியோ
வால்பாறை: வால்பாறை, ரொட்டிக் கடை பகுதியில் இருந்த வீட்டின் அருகே சிறுத்தை பதுங்கியிருந்த நிலையில், சப்தம் போட்டு காட்டிக் கொடுத்த வளர்ப்பு நாயால் சிறுவன் ஒருவன் நூலிழையில் உயிர்தப்பிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை நுழைவதைத் தடுக்க வேண்டும் என்றும், இந்த சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடித்து வனப் பகுதிக்குள் விட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள ரொட்டிக்கடை உயர்நிலைப் பள்ளிக்கு மேற்புறத்தில் குடியிருந்து வருபவர் சிவக்குமார், சத்யா தம்பதி. இந்த தம்பதியின் மகன் வீட்டின் முன்புறமாக விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, மிகவும் சப்தமாக நாய் குரைக்கும் சத்தம் கேட்டுள்ளது.

அப்போது, அந்த சிறுவன் அம்மா சிறுத்தை என்று அலறி அடித்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடிச் சென்றுள்ளான். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் வெளியே சென்று பார்த்துள்ளனர். அப்போது நாய்கள் மட்டும் மிகுந்த சப்தம் போட்டு கொண்டு இந்துள்ளன.
இதையடுத்து, சிறுவனின் தந்தை சிவக்குமார் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் என்னவென்று பார்த்துள்ளார். அப்போது, அவருடைய வீட்டின் அருகே சிறுத்தை பதுங்கி இருப்பதும், இதனைப் பார்த்த அவர்களது வளப்பு நாய் குரைத்த சப்தத்தால் ஆத்திரமடைந்து ஆக்ரோஷத்துடன் பாய்ந்து வந்து பின்பு திரும்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
வளப்பு நாய் மட்டும் குரைக்காமல் இருந்தால் சிறுவனின் கதி என்னவாகியிருக்கும் என்று நினைத்தாலே திகிலூட்டுகிறது என்று அப்பகுதியினர் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதி பொதுமக்களும் பெரும் அச்சத்துடனே இருந்து வருகின்றனர்.
வனத் துறை அதிகாரிகள் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது அப்பகுதி மக்களை பீதியடைய வைத்துள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்குள் சிறுத்தை நுழைவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications