வருமானவரித்துறை அத்துமீறல்...மகளை தேர்வுக்கு அனுப்பமுடியவில்லை - விஜயபாஸ்கர் கதறல்
வருமான வரித்துறையினர் அத்துமீறி செயல்படுவதாகவும், தனது மகளை பள்ளிக்குக் கூட அனுப்ப முடியாமல் அதிகாலை 4 மணியில் இருந்து அடைத்து வைத்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: பாதுகாப்பு படையினர், வருமான வரித்துறையினர் அத்துமீறி செயல்படுகின்றனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார். அதிகாலை 4 மணியில் இருந்து தம்மையும் தமது குடும்பத்தினரை அடைத்து வைத்திருப்பதாகவும், மகளை பள்ளிக்கு தேர்வு எழுத கூட அனுப்ப முடியவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
வரி ஏய்ப்பு, ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தொடர்ச்சியாக எழுந்த புகார்கள் உள்ளிட்ட விவகாரங்கள் காரணமாக தமிழகத்தில் இன்று காலை வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லம், அவரது உறவினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு, பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் ரொக்க பணத்தை கைப்பற்றியுள்ளனர்.

அத்துமீறி நுழைந்த அமைச்சர்கள்
வருமான வரித்துறை சோதனை நடைபெறும் கிரீன்வேஸ் சாலையில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் , காமராஜ் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் ஆகிய 3 பேர் அத்துமீறி நுழைந்து பல கேள்விகளை எழுப்பினர்.

விஜயபாஸ்கர் புகார்
விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வெளியே கேட்டில் நின்று முழக்கமிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெளியே வந்த விஜயபாஸ்கர், செய்தியாளர்களிடம் பேசினார். பாதுகாப்பு படையினர், வருமான வரித்துறையினர் அத்துமீறி செயல்படுகின்றனர் என புகார் தெரிவித்தார்.

அனுதாபம் தேட முயற்சி
அதிகாலை 4 மணியில் இருந்து அடைத்து வைத்திருப்பதால் தமது மகளை பள்ளிக்கு அனுப்ப கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மகளை வெளியே கூட்டி வந்து உருக்கமாக பேசி அனுதாபம் தேட முயற்சி செய்தார் விஜயபாஸ்கர். அப்போது அங்கிருந்த பாதுகாப்புப்படையினர் அவரை உள்ளே செல்லக்கூறினர். ஆனால் அவர் மறுத்து விட்டு மீண்டும் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தமது வீட்டில் சோதனை நடத்தப்படுவதாக கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர், தம்முடைய வீட்டில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் எதையும் பறிமுதல் செய்யவில்லை என்றும் தெரிவித்தார். தமது மகளைக் கூட அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications