அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக விஜயதாரணி நியமனம்
சென்னை: காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவான மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளராக விஜயதாரணி எம்.எல்.ஏ நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்தன் திவேதி வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் உத்தரவுப்படி, அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளராக, விஜயதாரணி நியமிக்கப்படுவதாக, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன், மகளிர் காங்கிரஸ் தமிழகப் பிரிவு தலைவியாக இருந்து வந்த விஜயதாரணி, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் உடனான கருத்து வேறுபாடு காரணமாக, பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

விஜயதாரணிக்கு பதிலாக முன்னாள் எம்.எல்.ஏவும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மறைந்த பொன்னம்மாளின் பேத்தி ஜான்சிராணி, தமிழக காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தலைவியாக நியமனம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, கடும் அதிருப்தி அடைந்த விஜயதாரணி, அதிமுகவில் சேரப்போவதாக கூறப்பட்டது. இதனையடுத்து விஜயதாரணியை டெல்லிக்கு அழைத்த சோனியாகாந்தி, நடந்த சம்பவங்களை கேட்டறிந்தார். தன்னை ஒரு போராளி என்று சோனியாகாந்தி கூறியதாகவும் விஜயதாரணி தெரிவித்திருந்தார்.

சட்டசபை தேர்தலில் தற்போது வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக உள்ள விளவங்கோடு தொகுதியிலேயே போட்டியிட வாய்ப்பும் கேட்டதாக தெரிவித்தார்.
இந்தநிலையில் விஜயதாரணியை சமாதானப்படுத்தும் விதமாக, தற்போது மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில் தற்போது சிட்டிங் எம்.எல்.ஏவாக விஜயதாரணிக்கு, வருகிற தேர்தலில் சீட் தரப்படாது என்றும், அதற்குப் பதிலாகவே, இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications