மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விஜயதாரணி நீக்கம் : ராகுல் காந்தி அதிரடி!
சென்னை: தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து எம்எல்ஏ விஜயதாரணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக திண்டுக்கல் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் ஜான்சி ராணி அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினராக இருப்பவர் விஜயதாரணி. இவர் தமிழக காங்கிரஸ் மகளிர் அணி மாநில தலைவராகவும் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் அப்பதவியில் இருந்து விஜயதாரணி நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக தமிழக மகளிர் காங்கிரசின் புதிய தலைவராக திண்டுக்கல் மாவட்ட தலைவர் ஜான்சி ராணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார். அண்மையில் காலமான மூத்த எம்எல்ஏ பொன்னம்மாளின் பேத்தி ஜான்சி ராணி என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் விஜயதாரணிக்கும் இடையே மோதல் நிலவி வந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து இளங்கோவனை நீக்கக்கோரி சோனியா, ராகுல் காந்திக்கு கடந்த நவம்பர் மாதம் விஜயதாரணி கடிதம் எழுதியிருந்தார்.
காங்கிரஸ் மேலிடத்திற்கு புகார் கடிதங்களை அனுப்பியதோடு, டெல்லிக்கு சென்று நேரிலும் முறையிட்டனர்.
இந்நிலையில் அண்மையில் தமிழக காங்கிரஸ் தலைவர்களை டெல்லிக்கு அழைத்துப் பேசிய ராகுல் காந்தி, வரவிருக்கும் சட்டசபை தேர்தல் தொடர்பாகவும், கூட்டணி குறித்தும் விவாதித்தார். அப்போது இளங்கோவனை தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கும் எண்ணம் ஏதும் இல்லை என்றும், அவரது தலைமயில்தான் சட்டசபை தேர்தலை தமிழக காங்கிரஸ் சந்திக்கும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இதையடுத்து தற்போது விஜயதாரணியின் பதவி பறிப்பு நடந்துள்ளது காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.