சகாப்தம் படத்திற்கு பொதுக்குழு கூட்டத்தில் விளம்பரம் தேடிய விஜயகாந்த்
கோவை: ஒரு கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பற்றி பேசுவார்கள், கூட்டணி பற்றி திட்டமிடுவார்கள். ஆனால் தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் தனது மகன் அறிமுகமாகும் சினிமா படத்திற்கு விளம்பரம் தேடியுள்ளார் விஜயகாந்த் என்கின்றனர் கூட்டத்திற்கு போனவர்கள்.
போன ஆட்சியில 2 முதல்வர், இந்த ஆட்சியலையும் 2 முதல்வர் இருக்காங்க. 5 முதல்வர் இருந்தாலும் கவலையில்லை நான் ஜெயலலிதாவை விமர்ச்சிப்பேன் என்று கூட்டத்தில் அரசியல் பற்றி கொஞ்சம் பேசிய விஜயகாந்த், இளைஞர்களாகிய நீங்க கட்சியை வளர்க்க பம்பரமா சுத்தனும் என்றார்.
உடனே கூட்டத்தில் இருந்த ஒருவர் நீங்களும் இளைஞர்தான் என்று குரல் கொடுக்கவே, உற்சாகமான விஜயகாந்த், நானும் இளைஞன்தான் ஒரு படத்தில ஹீரோவா நடிக்கப் போறேன் என்றார். இதைக்கேட்டு கூட்டத்தில் உற்சாக விசில் பறந்தது.
மகனுக்கு ரசிகர் மன்றம்
என்னோட பையன் 'சகாப்தம்' படத்துல நடிச்சிட்டு இருக்கான். அவனுக்கு ரசிகர் மன்றம் தொடங்குறதுக்காக நிறைய பேரு கடும்போட்டி போடுறாங்க. சீக்கிரமே படம் ரிலீஸ் ஆகிடும்.
நானும் நடிக்கிறேன்
'சகாப்தம்' படத்துல நானும் நடிச்சிருக்கேன். ஒரு சண்டை காட்சியில வந்து பட்டையை கிளப்பியிருக்கேன்.
வெற்றி படமாக்கணும்
'சகாப்தம் படத்தை வெற்றிப் படமாக்கி 100 நாள் ஓட வைக்க வேண்டியது உங்க பொறுப்பு. ஊருக்குப் போனதும் எல்லோர்கிட்டயும் சொல்லுங்க.
எனக்கு எல்லாம் தெரியும்
நீங்க என்ன பண்றீங்கன்னு எல்லாத்தையும் நான் கவனிச்சிட்டுதான் இருக்கேன். எனக்கு எதுவும் தெரியாதுன்னு மட்டும் நினைச்சுக்காதீங்க என்றார்.
பேசும்போதே மறந்துடுவேன்
பேச்சை முடிக்கும் முன்பாகவே பத்திரிகையாளர்களுக்கு நன்றி சொன்ன விஜயகாந்த், நான் பேச்சு வாக்குல நன்றி சொல்ல மறந்துவிடுவேன். அப்புறம் விஜயகாந்த் நன்றி சொல்லலை அப்படின்னு எழுதுவீங்க என்றார்.
சிபிஐ விசாரணை
மீண்டும் எதையோ ஆரம்பித்த விஜயகாந்த், நான் என்ன சொல்லிட்டு இருந்தேன். சி.பி.ஐ விசாரணை தேவை என்று சொன்னேன்ல யாருக்கு கடலூர் வைத்தியநாதனுக்கு என்று கூறினார். அதை பொறுக்காத கேப்டன் டிவியே நேரலையை நிறுத்திவிட்டதுதான் சுவாரஸ்யம்.
கணக்கு காட்டலையேப்பா
நீங்க எல்லோரும் வாங்கிட்டுப்போன கட்சி நிதிக்கான புத்தகத்தை பலரும் திருப்பிக் கொடுக்காம இருக்கீங்க. அதை உடனடியாக கொண்டு வந்து கொடுங்க என்று தேமுதிகவின் ஏ.ஆர்.இளங்கோவன் கூற, கூட்டத்தில் இருந்த ஒருவர், 'கட்சி ஆரம்பிச்சதுல இருந்து இன்னும் வரவு செலவு கணக்கே காட்டாமல் இருக்கீங்க... அதை முதல்ல காட்டுங்க...என்று குரல் கொடுத்தனராம். ஆனால் அது காற்றோடு கலந்து போனது. முற்றும் போட்டு முடித்துவிட்டனர் தேமுதிக கூட்டத்தை.
எதுவுமே இல்லையே
பொதுக்குழுவில் பாஜக கூட்டணியில் இருந்து விலகும் முடிவை விஜயகாந்த் அறிவிப்பார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதைப்பற்றி ஒரு புள்ளி கூட வைக்கவில்லை விஜயகாந்த். அதேபோல பொதுக்குழு கூட்டத்தை சினிமா விளம்பர மேடையாக்கி மகன் படத்திற்கு விளம்பரம் தேடிக்கொண்டார் என்றும் தேமுதிகவினர் கிசுகிசுத்து சென்றனர்.