திருவள்ளூரில் நாக்கை துருத்தி கையை ஆவேசமாக ஓங்கி பொதுமக்களை அடிக்கப் பாய்ந்த விஜயகாந்த்...
திருவள்ளூர்: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் எங்கே சென்றாலும் அடிதடியாகத்தான் இருக்கிறது... திருவள்ளூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட போது தம்மை நெருங்கி வந்த பொதுமக்களை அவர் நாக்கை துருக்கி கையை ஆவேசமாக ஓங்கி அடிக்கப் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது வேட்பாளரை சரமாரியாக தாக்கியது தொடங்கி சட்டசபையில் நாக்கை துருத்தியது, கட்சி எம்.எல்.ஏ.விடம் அடிவாங்கியது என 'ரணகளமாகத்தான்' இருந்து வருகிறது.
அண்மையில் பண்ருட்டியில் அக்கட்சி எம்.எல்.ஏ. சிவக்கொழுந்தை பொதுமக்கள் முன்னிலையிலேயே சரமாரியாக தாக்கினார். அதுவும் இந்த எம்.எல்.ஏ. சிவக்கொழுந்து 3-வது முறையாக விஜயகாந்திடம் அடிவாங்கியும் இருக்கிறாராம்..
இந் நிலையில் திருவள்ளூரில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை விஜயகாந்த் நேற்று பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது வெள்ளப் பகுதிகளை பார்வையிடச் சென்ற போது பொதுமக்கள் அவரை கூட்டமாக நெருங்க முயன்றுள்ளனர்.
இதனால் ஆவேசமடைந்த விஜயகாந்த், நாக்கை துருத்தி கையை ஆவேசமாக ஓங்கியபடி பொதுமக்களை அடிக்கப் பாய்ந்தார்.. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.