இளங்கோவன் சொல்லி 3 நாள் கழித்து அதிமுக போராட காரணம் என்ன? விஜயகாந்த் கேள்வி
சென்னை: இளங்கோவன் பேசியதற்கு 3 நாட்களுக்கு பிறகு திடீரென அதிமுக போராட்டம் நடத்துவதன் பின்னணியில் மதுவிலக்கில் இருந்து மக்களை திசைதிருப்பும் நோக்கம் உள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.
இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 14ம் தேதி கூறிய கருத்துக்கு, 15, 16, 17 ஆகிய மூன்று நாட்கள் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் விடுப்பு எடுத்துக்கொண்ட அதிமுகவினர் 18 மற்றும் 19 தேதிகளில் யாருடைய கண் அசைவின் பேரில், இதுபோன்ற வன்முறை வெறியாட்டங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொழுந்துவிட்டு எரியும் மதுவிலக்கு பிரச்சினையை மக்களிடமிருந்து திசை திருப்பவே அதிமுக இதை கையில் எடுத்துள்ளது. சுய விளம்பரத்திற்காகவும், அரசியல் ஆதாயத்திற்காகவும், மக்கள் போராட்டமாக மாறியுள்ள மதுவிலக்கு பிரச்சினையில் இருந்து தன்னை தற்காத்து கொள்ளவும், மக்களுக்கு தன்மீது பரிதாபம் ஏற்பட வேண்டும் என்கின்ற நோக்கில்தான் அதிமுக இந்த பிரச்சினையை ஊதி ஊதி பெரிதாக்குகிறது.
ஒட்டுமொத்த தவறையும் தன்மீது வைத்துக்கொண்டு பிறர் மீது பழியை சுமத்துவது ஏற்புடையது அல்ல. சட்டம் என்பது ஆணாக இருக்கட்டும், பெண்ணாக இருக்கட்டும், ஆளும் கட்சியாக இருக்கட்டும், எதிர்க்கட்சியாக இருக்கட்டும் அனைவருக்கும் சமமானது என்பதை காவல்துறை நிரூபிக்க வேண்டும்.
அதிமுகவின் இதுபோன்ற மலிவான போராட்டத்தால் தமிழக மக்கள் பாதிக்கப்படுவதை தேமுதிக சார்பில் நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஜெயலலிதா தன் தொண்டர்களை கட்டுப்படுத்தி இதுபோன்ற வவன்முறை வெறியாட்டங்களில் அவர்கள் ஈடுபடாமல் தடுத்திட வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications