சாதிக்காக கொலை செய்வோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்- விஜயகாந்த்
சென்னை: தமிழகத்தில் சாதிக்காக சண்டையிடும் காலம் போய், கொலை செய்யும் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சாதிக்காக கவுரவக் கொலை செய்யும் கொடூர நிலை தொடர் கதையாகியுள்ளது அதிர்ச்சி தருகிறது. தருமபுரி இளவரசன், சேலம் கோகுல்ராஜ் ஆகியோரின் கொலையை தொடர்ந்து உடுமலை சங்கர் தற்போது கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இப்படி கவுரவக் கொலைகள் தொடர்ந்து நடைபெறுவதைத் தடுக்காமல் தமிழக அரசு வேடிக்கை பார்ப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.
இத்தகைய கொலைகளைத் தடுக்க தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் விஜயகாந்த் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

சாதிக்காக கொலை
"சாதிகள் இல்லையடி பாப்பா" என பாரதியார் பாடினாலும், சாதிகளை ஒழித்திட தந்தை பெரியார் போராடினாலும், தமிழகத்தில் சாதிக்காக சண்டையிடும் காலம் போய், கொலை செய்யும் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சாதிக்காக கவுரவக் கொலை செய்யும் கொடூர நிலை தமிழகத்தில் தற்போது நிலவிவருகிறது. தருமபுரி இளவரசன், சேலம் கோகுல்ராஜ் ஆகியோரின் கொலையை தொடர்ந்து உடுமலை சங்கர் தற்போது கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

அரசுதான் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும்
தமிழகத்தில் கவுரவக்கொலைகள் நடைபெறவில்லை என்றும், அதற்காக தனிச்சட்டங்கள் இயற்ற தேவையில்லை என்றும், சட்டமன்றத்திலே பதிலளித்த அதிமுக அரசுதான் இந்த கொலைக்கு தார்மீக பொறுப்பேற்கவேண்டும். தமிழகத்திலே சட்டம் ஒழுங்கு சரியாக இருந்திருந்தால், பட்டப்பகலிலே, போக்குவரத்து நெரிசல் மிகுந்த, மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில், நடுரோட்டில் இப்படிப்பட்ட கொலைச் சம்பவம் நடந்தேறி இருக்குமா?

காவல்துறை எந்த முயற்சியும் எடுக்கவில்லை
காவல் துறையினரின் கண்ணெதிரே இச்சம்பவம் நடைபெற்றதாகவும், உடனடியாக கொலையாளிகளை பிடிக்க காவல்துறை எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்றும் மக்கள் கூறுகின்றனர். எனவே காவல்துறையினர் இந்த கொலைச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாவண்ணம் தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும்.

ஜாதி அமைப்புகளே காரணம்
தமிழக மக்கள் சாதி, மத, பேதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் சகோதரர்களாக அன்புகாட்டி வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் ஒருசில சாதி அமைப்புகளும், அவர்களுக்கு பின்புலமாக இயங்கும் அரசியல் கட்சிகளும்தான் இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணமாக உள்ளன. எனவே தமிழக அரசு இதுபோன்றவர்களை அடையாளம் கண்டு, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தரவேண்டும்.

மனித நேயத்துடன் இருப்போம்
தமிழகத்தில் சாதிகள் ஒழிக்கப்படவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். தேமுதிக சாதி, மத, பேதங்களுக்கு அப்பாற்பட்டு மக்கள் நலனுக்காக தொண்டாற்றுவதில் உறுதியாக உள்ளது. எனவே தமிழக மக்களாகிய நாம் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு மனிதநேயத்துடன் இருப்போம் என்கின்ற உறுதியை ஏற்றுக்கொள்வோம் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.

விவசாயிகள் தற்கொலை
விஜயகாந்த் விடுத்துள்ள இன்னொரு செய்தியில் தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை செய்வது அதிகரித்து வருவதாக தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

தற்கொலையில் தமிழகம் முதலிடம்
அதிமுக ஆட்சியில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்திலும், அதிலும் குறிப்பாக தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணி கையில் அடுத்த இடத்திலும் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. அதிமுக அரசு விவசாயிகளின் நலனுக்கான வளர்ச்சி திட்டங்களை முறையாக செயல்படுத்தியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா?

போலீஸாரால் தாக்கப்பட்ட விவசாயி பாலன்
கடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சை மாவட்ட விவசாயி பாலன் டிராக்டருக்காக வாங்கிய கடன் தொகையில், இரண்டு தவணைகள் செலுத்தாமல் இருந்தமைக்காக காவல் துறையினரால் தாக்கப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கதாகும். அதற்கு காரணமான காவல் துறையினரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்யவேண்டுமென வலியுறுத்தி விவசாயிகள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.

விவசாயி அழகர் தற்கொலை
இந்நிலையில் அரியலூர் மாவட்ட விவசாயி அழகர் டிராக்டருக்காக வாங்கிய கடனில், மூன்று தவணைகள் செலுத்தாமல் இருந்தமைக்காக அவமானப்படுத்தப்பட்டதால், அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளது அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். இந்த சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் வெளி வந்ததால், அது அனைவருக்கும் தெரியவந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில், அதிமுக அரசின் மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற நிலையில்தான் தமிழகத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் உள்ளனர். அவர்களின் இன்னல்கள் வெளியே தெரிவதில்லை. இதுதான் இன்றைய விவசாயிகளின் உண்மையான நிலையாகும்.

"பொன்னியின் செல்வி" - பெயர் சூட்டினால் போதுமா?
விவசாயிகளுக்கு உரிய முறையில் கூட்டுறவு வங்கிகளிலும், தேசிய வங்கிகளிலும் கடன் வழங்கப்பட்டிருந்தால், தனியார் நிதி நிறுவனங்களிடம் கடனுக்காக கையேந்தும் நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்குமா? விவசாயிகளுக்கு தேவையான கடன்களை அதிமுக அரசு முறையாக வழங்கியிருந்தால், விவசாயிகளின் தற்கொலையையும், அவர்கள் மீதான தாக்குதலையும் தடுத்திருக்கமுடியும். முதல்வர் ஜெயலலிதா "பொன்னியின் செல்வி" என்று பட்டப்பெயர் சூட்டிக்கொண்டால் மட்டும் போதாது, அதற்கு ஏற்றாற்போல் விவசாயிகளின் நலனில் சிறிதாவது அக்கறை காட்டியிருக்கவேண்டும்.

அவர் பாட்டுக்குச் சுற்றுகிறார் மல்லையா
நமது நாட்டில் விவசாயிகள் மாற்றாந்தாய் மனப்போக்குடன் நடத்தப்படுகிறார்கள். அதற்கு உதாரணம்தான், ஒன்பதாயிரம் கோடி ரூபாய் கடனை பெற்ற விஜய்மல்லையா, சுகபோகமாக, எவ்வித இடையூறும் இல்லாமல் வெளிநாடு பறக்கிறார். அனைவருக்கும் உண்ண உணவு கொடுக்கும் விவசாயி, தான் பெற்ற கடனுக்கு தன் உயிரையே மாய்த்துக்கொள்ளும் நிலைதான் உள்ளது. விஜய்மல்லையாவிற்கு ஒரு நியாயம், ஏழை விவசாயிக்கு ஒரு நியாயமா? இதுதான் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளதா?

கடும் நடவடிக்கை எடுங்கள்
எனவே இந்த சம்பவங்களில் ஈடுபட்ட தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் அதற்கு துணையாக வந்த குண்டர்கள் மீதும், காவல்துறையினர் மீதும் கடும்நடவடிக்கை எடுத்து, இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாவண்ணம் தடுத்திடவேண்டும். மேலும் தற்கொலை செய்துகொண்ட விவசாயியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை உடனடியாக தமிழக அரசு வழங்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications