முப்தி முகமது சிறந்த ராஜதந்திரி அவரது மறைவு ஈடுசெய்ய முடியாதது: விஜயகாந்த் இரங்கல்
சென்னை: முப்தி முகமது சையது சிறந்த ராஜதந்திரியாகவும், போராட்ட குணம் மிக்கவராகவும் இருந்தவர். அவர் மறைவு ஈடுசெய்ய முடியாததாகும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தி:
ஜம்மு-காஷ்மீரின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் பெருந்தொண்டாற்றியவர். நீண்ட அரசியலில் தொலைநோக்கு பார்வையுடன் செயல்படும் அவருடைய பாங்கு பலராலும் பாராட்டப்பட்டுள்ளது. சிறந்த ராஜதந்திரியாகவும், போராட்ட குணம் கொண்டவராகவும், ஜம்மு-காஷ்மீர் மக்களின் பிரச்சனைகளை சிறப்பாக அணுகியவர்.

சாதாரண, சாமான்ய மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். அவர்களுக்காக பல்வேறு போராட்டங்களையும் முன்னின்று நடத்தியவர். ஜம்மு-காஷ்மீர் அரசியலில் ஏற்பட்ட பல்வேறு திருப்பங்களில் அவரின் பங்கு முக்கியமானதாகும். பொதுவாழ்வில் அவரது பங்களிப்பு என்றும் நினைவுகூறத்தக்கதாகும். அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களிடத்திலும் நட்பு பாராட்டியவர்.
இவ்வளவு பெருமைகளை பெற்ற மக்கள் ஜனநாயக கட்சியின் காஷ்மீர் மாநில முதலமைச்சர் முப்தி முகமது சையது உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது இழப்பு ஈடுசெய்யமுடியாத இழப்பாகும். அவரது நினைவும், புகழும், பெருமையும் என்றென்றும் அரசியலில் நிலைத்துநிற்கும் என்பதில் யாருக்கும் ஐயமில்லை.
அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், மக்கள் ஜனநாயக கட்சியை சார்ந்த தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications