தென்னாப்பிரிக்காவின் காந்தி… மண்டேலா மறைவுக்கு விஜயகாந்த் இரங்கல்!
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கருப்பு இன மக்களின் சுதந்திரத்திற்காக போராடிய தென்னாப்பிரிக்காவின் காந்தி என்று அழைக்கப்படும் நெல்சன் மண்டேலா அவர்கள் காலமானார் என்ற செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அகிம்சை வழியில் போராடி வாழ்நாளில் பெரும் பகுதி காலத்தை சிறையிலே கழித்தவர். அடக்குமுறைகளை கண்டு அஞ்சாமல் சிறைவாசத்தை கண்டு சிறிதும் கலங்காமல், கொண்ட கொள்கையிலே மன உறுதியோடு இருந்து அதில் வெற்றி பெற்றவர். உலக மக்களால் அமைதிக்கு மறுபெயர் நெல்சன் மண்டேலோ என்று சொல்லக்கூடிய அளவில் புகழ் பெற்றவர்.
கறுப்பின மக்களுக்காக நீண்ட நெடிய போராட்டத்தை நடத்தி மக்களுக்காக வாழ்ந்தவர். அப்படிப்பட்ட சிறப்பு வாழ்ந்த ஒரு உலகத் தலைவரை இழந்திருக்கின்றோம். அவரை இழந்து வாடுகின்ற அவருடைய குடும்பத்தாருக்கும், அந்நாட்டு மக்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
அவர் இவ்வுலகை விட்டு மறைந்தாலும், அவருடைய பெயரும், புகழும் பல நூறு ஆண்டுகள் நிலைத்து நிற்கும். அவருடைய வாழ்க்கை வரலாறு உலக வரலாற்றில் என்றும் மறையாது நிலைத்து நிற்கும். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.